96
இன்ப வாழ்வு
இளம் பெண்கள் இருவர். அழகாலும் ஆடை அணிகளாலும் ஒருத்தி தலைவி என்றும், மற்றொருத்தி தோழி என்றும் சிறுவரும் உணர்ந்து கொள்ளமுடியும். உயர் பெண்கட்கு உரிய இலக்கணங்கள் முழுதும் உடையவள் தலைவி, கன்னிப்பெண். தோழியுடன் பொழுதுபோக்காகப் பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். வேட்டை விருப்பனாய்ச் சென்ற ஆண்மகன் கண்ட காட்சி அதுதான். அவர்களும் அவனைக் கண்டார்கள். தலைவியின் பார்வையால் தலைமகனுக்கும், தலைமகன் பார்வையால் தலைவிக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது என்றால் அதனை இயற்கை என்றே கூறவேண்டும் அல்லவா? உடனே அவள் அவனை நோக்குவதை விட்டாள். தோழியிடம் உரையாடிக்கொண்டே பூத்தொடுக்கலானாள். அதுவும் வழக்கந்தானே. அவனும், புதுப்பெண்கள் உள்ள இடத்தில் நமக்கென்ன மிக்க பார்வை என்றெண்ணித் தன் காரியத்தின்மேல் கண்ணுடையவனாய்ச் சென்றான். இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று சொல்லமுடியாது. மற்றொருமுறை கண்டு கொள்ளவேண்டும் என்ற ஆவலுக்கு அடிமைப்பட்டுவிட்டார்கள்.
மறுநாள். அதே நேரம். தலைவி நீர் திரட்டிக் கொண்டு வந்தாள். தலைவன் வேட்டை விருப்பனாய் வில்லேந்திச் சென்றான். அவர்களின் வருகையை ஒரு மரம் குறுக்கிட்டு மறைத்தது. ஒருவர்க்கொருவர் வருவதை அறிந்துகொள்ளவில்லை. அதனால் நெருங்கி இடித்துக் கொண்டார்கள். இவ்வாய்ப்பை உண்டாக்கித் தந்த பெருமை அம் மரத்திற்கே உரியது. அவர்கள் அம்மரத்தை