பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

99



“புரந்தர தாரு புதுவைச் சடையன்
இருந்த வியலூர் தெற்குமேற்கு - பரந்தபொன்னி
ஆற்று நீரால் விளையுமப்பாற் கிழக்காகி
மாற்று நீரால் விளையு மாம்”.

6.3.2 சேதிராயன் புதுவை

இனிச் சடையன் மகன் சேதிராயனைப் பற்றிய பாடல் வருமாறு:

“காவிரியைச் சோணாட்டைக் காராளர் தம்மரபை
நாவலரைக் காவலரை நல்லோரை - பூவலயம்
உள்ளத் தகும்புதுவை ஊரைச் சிறப்பித்தான்
பிள்ளைப் பெருமாள் பிறந்து”

என்பது பாடல். சடையனுக்குப் பிறந்த பிள்ளைப் பெருமாள் சேதிராயன் என்பவன். இவன் ‘புதுவைச் சேதிராயன்’ என்னும் பெயராலும் வழங்கப்படுவான்.

6.4 வெண்ணெய் நல்லூர்

மேலுள்ள பாடல்களில் அறிவிக்கப்பட்டுள்ள சங்கரன், சடையன், புதுவை, காவிரி, சோழமண்டலம் என்னும் பெயர்களை நோக்குங்கால், இந்தப் புதுவை என்பது தஞ்சை மாவட்டத்துப் புதுவையே யாகும் என்பது தெளிவு. கம்பர் தம் இராமாயண நூலின் பாயிரத்தில்,

நடையின் நின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்தது இராமாவ தாரப்பேர்த்
தொடை நிரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே” (10)

என்று சடையனுக்கும் வெண்ணெய் நல்லூருக்கும் தொடர்பு காட்டியுள்ளார். இது, தஞ்சை மாவட்டத்திலுள்ள வெண்ணெய் நல்லூராகும்.