பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

137



முன்னிலையாளரும் தலைவரும் வாழ்த்துபவரும் மற்றும் வரவேண்டியவர்களும் வந்து விட்டனர் என்பதில், எது எது எதை எதைத் தழுவுகிறது என்று வினவின், எதுவும் எதையும் தழுவவில்லை-இங்கே உம்மைகளை எண்ணிக்கைப் பொருளில் உள்ள எண் உம்மையாகக் கொள்ளவேண்டும், ஏனெனில், இங்கே எதுவும் எச்சமாக குறைவாக இல்லை. தலைவரும் வந்து விட்டார் என்பதிலோ, ‘உம்’ தன்னில் தானே கருத்து முடியாமல், இன்னும் யரோ வந்து விட்டவரையோ-இன்னும் யாரோ வரவேண்டியவரையும் குறிக்கும் குறைச் சொல்லாக - எச்சச் சொல்லாக இருப்பதால் எச்ச உம்மை எனப் பெயர் வழங்கப்படுகிறது.

நிகழ்வது தழுவுவது

இலக்கண உரையாசிரியர்கள், இறந்தது தழீஇய எச்ச உம்மை, எதிரது தழீஇய எச்ச உம்மை என்னும் இரண்டைத் தவிர, நிகழ்காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு ‘நிகழ்வது தழீ இய எச்ச உம்மை, என ஒன்று இருப்பதாக எங்கும் கூறவேயில்லை. அதை நாம் கண்டு பிடித்தாக வேண்டும்.

‘ஒரே நேரத்தில் முருகனும் கூவினான்-கண்ணனும் கூவினான்’ என்றால், முருகனும் கண்ணனும், என்பவற்றில் உள்ள உம்மைகளை நிகழ்வது தழீஇய எச்ச உம்மைகள் எனலாம். முருகனும் என்ற உம்மை கண்ணனும் கூவியதையும், கண்ணனும் என்ற உம்மை முருகனும் கூவியதையும் தழுவுகின்றன, ஒருவர் முன்னேயும் மற்றொருவர் பின்னேயும் கூவினால், இறந்தது-எதிரது எனலாம். இருவரின் கூவலும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததால், இந்த உம்மைகள் நிகழ்வது தழுவியனவாக உள்ளன.