பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

139



திருவள்ளுவர் காதல் காட்சியை மிகவும் நாகரிகமாகப் படைத்துக் காட்டியுள்ளார். காதலன் நோக்கும் போது காதலி பார்க்காதது போல் தலை குனிந்து தரையைப் பார்க்கிறாளாம். காதலன் பார்க்காதபோது காதலி புன்முறுவலுடன் நிமிர்ந்து அவனைப் பார்க்கின்றாளாம். இரவில் பேருந்துகள் எதிர் எதிராக இயங்கும்போது, ஒரு வண்டி இயக்குநர் விளக்குப் போட்டால் எதிரே உள்ளவர் விளக்கை நிறுத்தி விடுவார். அவர் விளக்கு போட்டால் இவர் நிறுத்தி விடுவார். இது போன்றல்லவா இந்தக் காதலர்களின் காட்சி இருக்கிறது.

“யான் நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”

என்பது திருக்குறள்.

திருவள்ளுவர் காதலர்களின் நோக்கத்தை இவ்வளவு நாகரிகமாகக் கூறியிருக்க, கம்பரோ மிகவும் பச்சையாகக் கூறியிருக்கிறார். இதற்கும் தக்க காரணம் உள்ளது. திருவள்ளுவரின் காதலர்கள் புதுமுகங்கள். கம்பரின் காதலர்களோ மிகவும் பழைய முகங்கள்.

“கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமா?”

என்று கம்பர் பாடி இராமன்-சீதை காதலை நாகரிகப் படுத்தியுள்ளார்.

திருவள்ளுவரின் காதலர்களோ ஒருவர் பார்க்கும்போது மற்றொருவர் பார்க்கவில்லை. கம்பரின் காதலர்களோ ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொள்கின்றனர். இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்ணப் பார்க்கின்றனவாம். நோக்கின் வாயிலாக நிலை தடுமாறி இருவர் உள்ளமும் ஒன்றும்படியாக இராமனும் நோக்கினானாம்; அதே நேரத்தில் சீதையும் நோக்கினாளாம்;