பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சுந்தர சண்முகனார்



“மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க” (2)

என்று கூறியுள்ளார். முகம் மலர்ந்து நோக்குவதோடு அகமும் உண்மையாக உவந்து இன்சொல் இயம்பவேண்டும் என்று அறிவித்துள்ளார் வள்ளுவர்.

“முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொலினதே அறம்” (93)

என்பது திருக்குறள் பாடல்.

பிறர் நம்மிடம் இன்சொல் பேசினால்தான் நமக்கு மகிழ்ச்சியா யிருக்கிறது. இதுபோல் நாமும் பிறரிடம் இன்சொல் பேசினால்தானே அவர்கட்கும் மகிழ்ச்சியாயிருக்கும் என்பதை உணராமல், சிலர் பிறரிடம் வன்சொல் பேசுவது எதற்காக? என்று வருந்துகிறார் வள்ளுவனார்.

“இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது” (99)

என்பது குறள் வன்சொல். வழங்கும் பொருளா என்று கேட்பதுபோல் தெரிகிறது.

ஒருவர் தம்மை அணி (அலங்காரம்) செய்து கொள்வதற்குப் பொருள் செலவு செய்து விலைமிக்க ஆடை அணி கலன்கள் வாங்க வேண்டிய தில்லையே! தம்மை அணி செய்வதற்குப் பணிவுட்ன் கூடிய இன்சொல்லே மலிவானதும் மிகவும் உயர்ந்ததும் ஆன அணிகளாகும் என்பது வள்ளுவம்!

“பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி, அல்ல மற்றுப் பிற” (95)

என்பது அந்த வள்ளுவம்.

எனவே, மக்கள் ஒருவர்மேல் ஒருவர் இன்சொல் மழை பொழிந்து அதில் நனைந்து குளிர்ந்து நன்கு மகிழ்வார்களாக!