பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

சுந்தர சண்முகனார்



பிறப்பியல்

எழுத்துகளின் பிறப்பு ஒலி இலக்கணத்தில் இருபதாம் நூற்றாண்டில்தான் மேலைநாட்டினர் கருத்து செலுத்தியுள்ளனர். தொல்காப்பியரோ தம் தொல்காப்பிய நூலில் இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்பே, இதற்காகப் பிறப்பியல் என ஒரு தனி இயலே அமைத்துள்ளார். பவணந்தியார் தம் நன்னூலில், எழுத்ததிகாரத்தில் உள்ள எழுத்தியலில், எழுத்துப் பிறப்பொலி இலக்கணத்தை விளக்கியுள்ளார். எனவே, இந்தப் பகுதி நன்னூலில் மிகவும் கற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒலிப்பு திருந்தினால்தான் பேச்சு திருந்தும். பேச்சு திருந்தினால்தான், படிப்பதும் எழுதுவதும் திருத்தமாயிருக்கும். கிரீனிங் (Greening) என்னும் அறிஞர், “திருத்தமான எழுத்து நடை என்பது, ஒழுங்கு செய்யப்பெற்ற பேச்சு நடையின் பயனேயாகும்” - என்று கூறியுள்ளார். இதைத்தான் ஒளவையார், “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” - என ஒரு தனிப்பாடலில் அறிவித்துள்ளார். எழுத்து கண்டுபிடிப்பதற்கு முன்பே, கல்வி இருந்தது; அது பேச்சுவாயிலாகவும் கேள்வி வாயிலாகவும் நடைபெற்று வந்தது என்னும் கருத்தை ஈண்டு நினைவில் கொள்ளல் வேண்டும்.

அளபெடை

எழுத்தியலில் ‘இசை கெடின்’ (91) என்று தொடங்கும் நூற்பாவில் அளபெடை பற்றிப் பவணந்தியார் கூறியுள்ளார். போய் என்பதைப் ‘போஒய்’ எனவும், கெடுப்பதும் என்பதைக் ‘கெடுப்பதூஉம்’ எனவும், நிறுத்தி என்பதை ‘நிறீஇ’ எனவும், நெடிலுக்குப்பின் அதன் இனக்குறிலை அமைத்து அளபை (மாத்திரையை - ஒலி அளவை) மிகுதியாக எடுப்பது அளபெடையாகும்.