பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. உயிர் அன்பு ஒருமைப்பாடு

உயிர் நேயம் என்பது உயிர்களிடத்தில் செலுத்தும் நேயம். அதாவது அன்பு எனப் பொருள்படும். இதைச் சிலர் ‘ஆன்ம நேயம்’ என்பர். தமிழில் ‘உயிர் அன்பு’ எனலாம். மேலோடு நோக்கின், உயர்திணையாகிய மக்களிடம் - மக்கள் உயிரியிடம் செலுத்தும் அன்பு என்பது பெறப்படும். சிறிது ஆழ்ந்து நோக்கின், அஃறிணையாகிய-ஓரறிவு உடைய உயிர்கள் எனப்படும் மரம் செடி கொடி புல்பூண்டு முதல் ஆறறிவுடைய மாந்தர் வரை அனைத்து உயிர்களிடமும் செலுத்தும் அன்பு என்னும் கருத்து கிடைக்கும்.

உயிர்ப்பது அதாவது சுவாசிப்பது உயிர். ஆன்மா என்னும் வட சொல்லின் வேர்ச் சொல்லாகிய ‘ஆன்’ என்பதற்கும் ‘உயிர்த்தல்’ என்பதுதான் பொருளாகும். பெரும்பாலும் பல்வேறு உயிர்கட்கும் உயிர்ப்பு. சுவாசிப்பது உண்டு. மர இனங்கள் (தாவரங்கள்) மக்கள் வெளியிடும் கரியகத்தை (கரியமில வாயுவை) உட்கொண்டு, உயிரகத்தை (பிராண வாயுவை) வெளியிடும் செய்தி ஈண்டு எண்னத்தக்கது. அதானல், மர இனங்களையும் உயிர்ப் பொருளாகச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

மக்கள் ஒருவர்க்கு ஒருவர் அன்பு செலுத்தல் வேண்டும் என்னும் கருத்தோடு, பறவை-விலங்கு முதலிய அஃறிணை உயிர்களையும் கொல்லலாகாது-கொன்று-தின்னலாகாது என்ற கருத்தும் உயிர் அன்பில் (ஆன்ம நேயத்தில்) அடக்கப்படும்.

மர இனமான தாவரங்கட்கும் பல உணர்வுகள் உண்டு. அவற்றுள்ளும் ஆண்பெண் உண்டு. எல்லா மர இன உயிரிகளும் காதல் புரிகின்றன. அவற்றிலிருந்து கிடைக்கும் தானியங்கள்-பருப்பு வகைகள்-கொட்டைகள் முதலியனவும்