பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

199



இலத்தின் மொழியிலிருந்து, இத்தாலி, பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீசியம் முதலிய மொழிகள் பிரிந்தது இந்த மாதிரியே யாகும். இவற்றுள் சிலவற்றை Spoken Latin என்று சிலர் சொல்வர்; அதாவது, இலத்தீனின் கொச்சைப் பேச்சு வடிவங்களே இம்மொழிகளாகத்திரிந்தன என்பர். இதில் சிலர்க்குக் கருத்து வேற்றுமையும் இருக்கலாம்.

எனவே, இலக்கணம், மக்கள் பிரியாதிருக்கும்படி அவர்களிடையே ஒருமைப்பாட்டை உண்டாக்குகிறது எனலாம். தொல்காப்பியத்தில் உள்ளவற்றுள் சிலவற்றை நீக்கியும், இல்லாத சிலவற்றைச் சேர்த்தும் நன்னூலைப் பவணந்தியார் படைத்துள்ளார் என்பது உண்மைதான் அதனால், நடைமுறை இலக்கணம் என்று சொல்லிக் கொண்டு அளவு மீறிக் கண்டபடி மொழியில் மாற்றம் செய்யக்கூடாது. ஒரு சிறிதும் மாற்றம் செய்யக்கூடாது என்று பிடிவாதமாய் முரட்டுத்தனமாய்ப் பேசக்கூடாது. ஆர்தர் மன்னர் (King Arthur) தம் இறுதிக்காலத்தில் பெடீவர் (Bedeiver) என்னும் அமைச்சரை நோக்கி, “The old order changeth yielding place to new” என்று கூறினாராம். அதாவது, பழமை புதுமைக்கு இடம் தந்து மாறுகிறதாம். இதைத்தான் பவணந்தியார் தம் நன்னூலின் இறுதியில் பின்வருமாறு கூறிப்போந்தார்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே” (462)

கட்டுரைக்குக் கருத்து வழங்கிய கருவூலங்கள்

தொல்காப்பியம் - தொல்காப்பியர்
நன்னூல் - பவணந்தி முனிவர்
நற்றிணை - பாடல் 359 – கபிலர்