பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சுந்தர சண்முகனார்


யறிவும் பெற்றிருப்பதால் என்ன பயன் இருக்க முடியும்? - என்று வினவுகின்றார் வள்ளுவர்;

“தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்” (318)

“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை” (315)

என்பன குறள்கள்

மிகுதியான மலப்போக்கினால் மலத்தோடு மலமாய் மயங்கிக் கிடந்த ஒருவனைக் கவுதமப் புத்தர் எடுத்துத் தூய்மை செய்து காப்பாற்றினார் என்பது நடந்த வரலாறு. பெரு நோய் பிடித்தவனைத் தொட்டுப் பிடித்து அவனுக்கு ஆகவேண்டிய உதவிகளை அண்ணல் காந்தியடிகள் புரிந்தார் என்பதும் உலகறிந்த வரலாறு. இஃதன்றோ உயிர் அன்பு-ஆன்மநேயம்!

தாம் வேறு - உயிர் அன்பு வேறு என்று சொல்ல முடியாமல், தாமே உயிர் அன்பின் மொத்த உருவமாய் விளங்கிய வடலூர் இராமலிங்க வள்ளலார், பசித்தவரைப் பார்க்கப் பொறாமல், இலவசமாக உணவளிக்க அறச்சாலை அமைத்து உதவினார். வாடிய பயிரைக் கண்டாலும் அவர் வாடினாராம். பசியில் வருந்தி வீடு தோறும் சென்று இரந்தவரைக் கண்டு பதைத்தாராம்; பிணியினால் வருந்தியவரைக் கண்டு உள்ளம் துடித்தாராம்; மானம் ஒரு பக்கம் இழுக்க - ஏழமை ஒரு பக்கம் இழுக்கச் செய்வது அறியாது உள்ளம் சோர்ந்து இளைத்தவரைக் கண்டு தாமும் உள்ளம் இளைத்துச் சோர்ந்து போனாராம்.

“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்