பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

235



‘நீர் உலையாக ஏற்றி’ என்பது, பாலையோ - மோரையோ உலையாக ஏற்றும் பண்டைய பழக்கம் ஒன்றை அறிவிக்கிறது. வேறு இல்லாமையால் நீரையே உலையாக ஏற்றினாள். பால்-மோர் இல்லாவிடினும், அரிசி களைந்த நீரையாவது, சோறு வடித்த கஞ்சி நீரையாவது, ஏற்றுவதும் உண்டு இதனை,

“தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலினூங்கு இனிய தில்” (1065)

என்னும் குறளாலும் அறியலாம். பாலோ-மோரோ, வடித்த கஞ்சி நீரோ - எதுவும் இன்றி எந்தப் பசையும் இன்றித் தெளிந்த நீர் உலையிலே ஆக்கிய எளிய உணவாயினும், தன் உழைப்பால் கிடைத்ததை உண்ணலினும் இனிய உணவு வேறொன்றும் இல்லை என்பது இக்குறட்பாவின் கருத்து.

அடுத்த பாடலும் இன்னதே. இல் உணாத் துறத்தல், இல்லம் மறந்து உறைதல், வறு முலை சுவைத்தல், பெறாமை, வறுங்கலம் திறத்தல், அழுதல், மறப்புலி உரைத்தல், மதியம் காட்டுதல், தந்தையின் செவ்வி காட்டுதல், அல்லல் உழத்தல் - என்பன வறுமை காரணமாக ஏற்பட்ட அழுகை நிலை - வறுமை காரணமாக ஏற்பட்ட மெய்ப்பாட்டுச் செயல்கள்.

இத்தகைய மெய்ப்பாடுகள் பற்றித் தொல்காப்பியர் தம் தொல்காப்பிய நூலின் பொருளதிகாரத்தில் ‘மெய்ப் பாட்டியல்’ என ஒரு தனி இயலே அமைத்து விளக்கியுள்ளார்.

மெய் என்பதற்கு மெய்ம்மை - பொருண்மை எனப் பொருள் கொண்டு, உள்ளத்தில் உள்ள உண்மை (மெய்ம்மை) நிகழ்ச்சி வெளியார்க்குத் தெரியும்படி வெளிப்படுதல் மெய்ப்பாடு எனச் சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.