பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

சுந்தர சண்முகனார்


தெரியும்) பாடு ஆகும். படுவது பாடு, படுதல் = தோன்றுதல் – தெரிதல்.

எனவே, மெய்ப்பாடு என்பதற்கு இவ்வாறு பொருள் கொள்ளுதலே பொருத்தமானது.

மேலே தொடக்கத்தில் காட்டப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடலில், முதியவள் ஒருத்தியின் முதுமை காரணமாக அவள் உள்ளத்தில் எழுந்த இழிவுணர்ச்சி (தாழ்வு மனப்பான்மை) அவளுடைய உடல் - உறுப்புகளில் ஏற்பட்ட மாறுதல்களால் அறியப்பட்டதைக் கண்டோம். இந்த மெய்ப்பாட்டிற்கு, முதுமை காரணமாக வந்த ‘இளிவரல்’ என்று பெயராம். இளிவரல் என்றால் இழிவாம்.

மற்றும் அப்புறநானூற்றுப் பாடல்களால் வறுமை காரணமாக ஏற்பட்ட அழுகையை அறிந்தோம். இந்த மெய்ப்பாட்டிற்கு, வறுமை காரணமாக வந்த ‘அழுகை’ என்பது பெயர். இவ்வாறு பல மெய்ப்பாடுகள் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி அவை பற்றிக் காண்பாம்.

தொல்காப்பியர் பொருளதிகாரம் - செய்யுளியலின் முதல் நூற்பாவில், மெய்ப்பாடு செய்யுளின் உறுப்புகளுள் ஒன்றாகும் என்று கூறியுள்ளார். தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் மெய்ப்பாட்டை அறிமுகம் செய்துள்ள முறை திருத்தமாயில்லை. எடுத்த எடுப்பிலேயே,

“பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான்கு என்ப” (1)
“நாலிரண் டாகும் பாலுமா ருண்டே” (2)

என்று கூறியுள்ளார். முப்பத்திரண்டு (எண்ணான்கு) பொருளாம். அவை பதினாறிலும் (நானான்கு) அடங்குமாம். அந்தப் பதினாறும் எட்டில் (நாலிரண்டு) அடங்குவதும் உண்டாம்.