பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

243



இதிலிருந்து அறிவதாவது:- மெய்ப்பாடு நடிகர்களிடமிருந்து காட்சியைக் காண்பவர்களிடமும் ஏற்பட்டுவிட்டது என்பதாம். இத்தகைய ஒன்றிய மெய்ப்பாட்டு நிலைமைக்குத் தான் ‘ஒத்துணர்ச்சி’ (Sympathy) என்னும் பெயர் உளவியலில் தரப்பட்டுள்ளது.

சாவு வீட்டிற்குச் சென்றவர்கள் வீட்டினரின் துயரத்தைக் கண்டு தாமும் துயரப்படுவது உடல் உறுப்புகளால் துயரத்தை வெளிப்படுத்துவது ஒரு வகை மெய்ப்பாடு தான். ஆனால் இதை ஒரு கலை என்று கூறவியலாது. நாடகம் காண்பவர்களும் தமது உணர்வை ஒத்துப் பெறுமாறு நடிகர்கள் நடிக்கும் நடிப்பினை மெய்ப்பாட்டுக் கலை எனலாம். இதுபோலவே, நூலாசிரியர்கள், நூலில் கருத்தை அறிவிக்கும் கவர்ச்சியான முறையினால், நூலைப் படிப்பவர்கள் ஒத்துணர்ச்சி பெறுமாறு எழுதுவதும் மெய்ப்பாட்டுக் கலை எனப்படும்.

கூட்டம் என்னும் பொருளும் உடைய பண்ணையில் தோன்றிய எண்ணான்கு பொருள் எனத் தொல்காப்பியர் கூறியிருப்பதால், நாடகத்தின் உயிர் நாடி மெய்ப்பாடு எனக் கூறலாம். தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் ‘இவற்றின் பிரிவை நாடக நூலில் காண்க’ என்று கூறியுள்ளார். உரையாசிரியர்கள் இருவரும் செயிற்றியனார் இயற்றிய செயிற்றியம் என்னும் நாடக நூற் செய்திகள் சிலவற்றைத் தம் உரையிடையே அறிவித்துள்ளனர்:

மெய்ப்பாடு இரண்டு நிலைக்களங்களின் அடிப்படையில் தோன்றும். காட்டாக அச்சம் என்ற மெய்ப்பாட்டை எடுத்துக் கொள்ளலாம். அஞ்சுதற்கு உரிய புலி போன்றவை ஒரு நிலைக்களன். அவற்றைக் கண்டு அஞ்சுபவர் மற்றொரு நிலைக்களன். இதனை அறிவிக்கும் செயிற்றிய நூற்பா,