பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

41


திறக்கும்படி, கோயில் பூசனை புரியும் அந்தணர்களை வேண்டினான். அந்தணர்கள், “தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும்” (19) என்றனர். அதாவது, சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவரும் வந்தாலேயே அறை திறக்கப்படும் என்று கூறிவிட்டனர்.

வீட்டுலகில் (மோட்சத்தில்) இருக்கும் அம்மூவரையும் மன்னன் எந்தப் போக்கு வரவு ஊர்தியின் வாயிலாக எவ்வாறு அழைத்து வர இயலும்? பார்த்தான் மன்னன். உடனே, கோயிலில் மூவர் திருவிழா நடத்தச் சொன்னான். மூவர் சிலைகளையும் அணி செய்து ஊர்வலமாக அந்த அறைக்கு எதிரில் கொண்டுவரச் செய்தான்; இதோ மூவரும் வந்து விட்டனர் - கதவைத் திறக்கலாம் - என்றான்.

அந்த மூன்று சிலைகளையும் மூவர் இல்லை எனக் கூறின், எந்தக் கோயிலில் உள்ள எந்தச் சிலைக்கும் வேலை கிடையாதன்றோ? எனவே, கை காப்பு நீக்கி அறை திறக்கப்பட்டது.

செல்லுப் புற்று மண்ணால் சுவடிகள் மூடப்பட்டிருந்தன. புற்று மண்ணைத் தட்டிக் கொட்டிச் சீர்செய்து, நல்ல உருப்படிகளாகக் கிடைத்தவரையும் எடுத்துப் போற்றினர். மன்னன் வேண்டுகோளின்படி, நம்பியாண்டார் நம்பி, மூவர் பாடல்களையும் ஏழு திருமுறைகளாக வகுத்துத் தொகுத்தார்.

பன்னிரு திருமுறைகள்

சைவப் பெரு நூல்கள் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுப் போற்றப்படுகின்றன. அவற்றுள் முதல் ஏழு திருமுறைகள் மூவர் பாடல்களேயாகும். சம்பந்தரின் பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகவும், நாவுக்கரசரின் பாடல்கள் அடுத்த மூன்று திருமுறைகளாகவும் அதாவது -