பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

சுந்தர சண்முகனார்


நான்காவது - ஐந்தாவது - ஆறாவது திருமுறைகளாகவும், சுந்தரர் பாடல்கள் ஏழாவது திருமுறைகளாகவும் தொகுக்கப் பெற்றன.

பின்னர், மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகவும், திருவிசைப்பா-திருப்பல்லாண்டுப் பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகவும், திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகவும், திரு முகப் பாசுரம் முதலானவை பதினோராம் திருமுறையாகவும் தொகுக்கப் பெற்றன. சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகப் பின்னர்க் கொள்ளப்பட்டது.

திருமுறைகள் வெளிவரச் செய்ததால், இராச ராசன், திருமுறைகண்டசோழன் என்னும் சிறப்புப் பெயரால் வழங்கப்படுகிறான்.

இந்தப் பன்னிரண்டு நூல்களையும் இணைத்துப் ‘பன்னிரு திருமுறைகள்’ எனத் தொகைப் பெயர் தந்திருப்பது, ‘பன் மாலைத் திரள்’ வகையாகும்.

முதல் ஏழு

இங்கே, இறுதி ஐந்து திருமுறைகளை விடுத்து, முதல் ஏழு திருமுறைகளை மட்டும் முதலில் எடுத்துக் கொள்ளலாம். மூவர் பாடல்களும் மூன்று நூல்களாக ஆக்கப் பட்டன. இவையே ‘மூவர் தமிழ்’ என்னும் தொகைப் பெயர் பெற்றன. ‘மூவர் தமிழ்’ என்னும் தொகையையும் ‘பன் மாலைத் திரள்’ வகையில் சேர்க்கலாம்.

மூவர் தமிழ் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப் பட்டதைப் பற்றிக் கூறும் பாடல்கள் இதற்கு அகச்சான்றுகளாம். மந்திரங்கள் ஏழுகோடியானதால் இப்பாடல்கள் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டனவாம். பாடல்கள் வருமாறு:-