பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

45


தேவாரம், திருஞான சம்பந்தர் தேவாரம், அப்பர் என்னும் திருநாவுக்கரசர் தேவாரம், சுந்தரர் தேவாரம் என மூவகையாக ஆசிரியர் பெயரால் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு வரும் பாடிய தேவாரப் பாக்கள் அவரவர் பெயரால் தனித் தனியாகக் குறிப்பிடப் படும்போது, அவ்வத் தொகையைத் ‘தனி மலர் மாலை’ என்னும் வகைக்குள் அடக்கலாம்.

தேவாரப் பெயர் ஆட்சி

தேவாரம் என்னும் பெயர் முதலில் பாக்களைக் குறிக்கவில்லை. கடவுள் தொடர்புடையது - கடவுள் வழிபாட்டுத் தொடர்புடையது-கடவுள் திருமேனி (விக்கிரகம்) தொடர்பானது. வழிபாட்டு இடத் தொடர்புடையது என்னும் பொருளில் சில நூல்களிலும் சில கல்வெட்டுகளிலும் தேவாரம் என்னும் பெயர் ஆட்சி காணப்படுகின்றது. உமாபதி சிவம் என்பவர் இயற்றிய கோயில் புராணம்-திருவிழாச் சருக்கம் என்னும் பகுதியில்,

“உயர்தர மூவாயிரவர் கடாவா மறையொடு
தேவாரக் கைப்பற்றிய பணிமுற்ற...” (27)

என்றும் ஈடு முப்பத்தாறாயிரப்படி என்னும் வைணவ விரிவுரை நூலில், ‘உம்முடைய தேவாரமோ’ (6.8-10) என்றும் இப் பெயராட்சி உள்ளது.

மற்றும், தென்னிந்தியக் கல்வெட்டு ஒன்றில் (7-269), “பெரிய வுடையார் தேவாரத்தில் கேட்டருளி” என்றும், மற்றொரு கல்வெட்டில் (2.155) “பெரிய பெருமாளுக்குத் தேவார தேவராக எருந்தருளிவித்த தேவர்” என்றும், முனியூர்க் கல்வெட்டில் (8-205) “திருமுறைத் தேவாரச் செல்வன்” என்றும், திருக்களார் கல்வெட்டில் (8-260) “நம் தேவாரத்திற்குத் திருப்பதிகம் பாடும் பெரியான்” என்றும் தேவாரப் பெயர் ஆட்சி காணப்படுகிறது.