பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

59



பின்னர்ச் சிறிது நேரத்தில் பிரெஞ்சுக்காரத் தலைவர் ஆசிரியர்கள் அமர்ந்திருந்த கூட்டத்துக்கு வந்தாராம். வந்ததும் கவிஞர் சுப்புரத்தினத்தை நெடுநேரம் ஏற இறங்கக் கவனித்துப் பார்த்தாராம்; பிறகு அவ்விடத்தினின்றும் அகன்று உள்ளே சென்றாராம்.

தலைவர் உள்ளே சென்றதும் ஆசிரியர்கள் மிகவும் அஞ்சி, கவிஞரை நோக்கி, “டேய் சுப்புரத்தின்ம்! பார்த்தாயா? துரை எதற்கு உள்ளே போயிருக்கிறான் தெரியுமா? உனக்கு ‘டிஸ்மிஸ்’ ஆர்டர் எழுதிக்கொண்டு வரத்தான் போயிருக்கிறான். இனிமேலாவது எழுந்து போய்விடு. உன்னை மன்னித்தாலும் மன்னிப்பான். இல்லாவிடின் உன்னோடு எங்களுக்கும் ஏதாவது தொல்லை நேரிடலாம்”, என்று சொல்லிப் பார்த்தார்களாம். அப்போதும் கவிஞர் எழுந்து செல்லாமல் (‘ஆணி அடித்துக் கொண்டும்’ வேர் பாய்ந்தும்) அதே இடத்தில் அமர்ந்திருந்தாராம்.

சிறிது நேரத்தில் துரை தம் மனைவியை அழைத்து கொண்டு வந்து கவிஞரைச் சுட்டிக்காட்டிப் பின்வருமாறு கூறினாராம்: ‘இதோ பார் இவரை! கதர் ஆடையும் கதர் குல்லாவும் அணியக் கூடாது; அணிந்தால் வேலை போய்விடும் என்று நாம் விதி செய்துள்ளோம். அப்படியிருந்தும், இவர் எதற்கும் அஞ்சாமல் கதர் உடையுடன் என் எதிரிலேயே வந்திருக்கிறார். இவருடைய உறுதியான துணிவையும் நாட்டுப் பற்றையும் பார்! இப்படியொரு நாட்டுப் பற்றுடையவர் இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை’ என்று தம் மனைவியிடம் கூறிக் கவிஞரை மெச்சினாராம். அதன்பிறகுதான் ஆசிரியர்கள் அச்சம் நீங்கி மூச்சு விட்டார்களாம்.

இங்கே நாம், கவிஞரின் உறுதியான நாட்டுப் பற்றைப் பெரிதும் வியப்பதா? அல்லது, கல்வித்துறைத் தலைவரின்