பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

61


மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப
வார்த்தைகள் பேசிடும் போது
கட்டுக்கு அடங்கா நகைப்பைப் - பனை
‘கல கல’ என்று கொட் டிற்றே.”

என்பது பாடல். இங்கே, குட்டைப் பனை மரம்தான் காதலன்; ஈச்ச மரம்தான் காதலி. ஈந்து என்றால் ஈச்ச மரம். பனை மரம் மிகவும் நெட்டையா யிருக்கும். மிகவும் உயரமாய் இருப்பவரைப் பார்த்து ‘பனை மரம் போல் வளர்ந்து விட்டார்’ என்று கூறுவது வழக்கம். ஆனால், சிற்றீச்ச மரமோ, பனை மரம் போல் இன்றி ஓரளவு உயரமே இருக்கும். காதலனும் காதலியும் கைகோத்துக் கொள்ள வேண்டுமெனில், நெட்டைப் பனை மரத்திற்கு ஒத்து வராது. அதனால்தான், ஈச்ச மரத்தோடு கைகோத்துக் கொள்ளக் குட்டைப் பனை மரத்தால் முடிந்தது.

காதலி ஈந்தின் கூந்தல் சரிந்தது எப்படி? பனை மரத்தின் மட்டைகள் நேர்க் கோட்டில் நீண்டு கொண்டிருக்கும். (நாளாகிய பனை மட்டை இற்று விழும் நிலையில் கீழ் நோக்கித் தொங்குவதை இங்கே எடுத்துக் கொள்ள லாகாது). ஈச்ச மரத்தின் மட்டைகளோ எப்போதுமே - இயற்கையாகவே சரிந்த நிலையில் இருக்கும். இந்த இயற்கை நிலைமை, இன்ப மயக்கத்தால் கூந்தல் சரிந்திருக்கும் நிலையை நினைவூட்டுகிறது.

கை கோத்துக் கொள்ளலாவது: குட்டைப் பனை மரமும் ஈந்தும் பக்கத்தில் பக்கத்தில் நெருங்கி யிருப்பதால், பனையின் மட்டைகள் ஈந்தின் மட்டைகளுக்குள்ளும், ஈந்தின் மட்டைகள் பனையின் மட்டைகளுக்குள்ளும் புகுந்து செருகிக் கொண்டிருக்கும் நிலை. இதுதான் கை கோத்துக் கொள்ளுதல் என்பது.

இன்ப வார்த்தைகள் பேசுதல் என்பது, காற்றினால் மட்டைகள் அசையும்போது ஏற்படும் ஒலியாகும்.