பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

சுந்தர சண்முகனார்



வரலாற்று நூல்களில் மாபெரும் போர்களைப் பற்றிப் படிக்கிறோம். அப் போர்களால் விளைந்த கேடுகளைப் பற்றியும் படிக்கிறோம். எனவே, போர் கூடாது என்பதை ஆணித்தரமாக அறிய முடிகிறது.

இலக்கியங்களில் உள்ள வரலாற்றுச் செய்திகட்கும் மக்களை வழிநடத்திச் செல்வதில் பங்கு உண்டு. சிலப்பதிகாரத்தால், ஆழ்ந்து ஆய்ந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதையும், மணிமேகலையால் உலகப் பற்றுப் பிணிப்பு கூடாது என்பதையும், பெரிய புராணத்தால் அன்பு நெறியினையும் பாரதத்தால் பங்காளிகட்குள் பகையின்றி ஒற்றுமை வேண்டும் என்பதையும் சூது கூடாது என்பதையும், இராமாயணத்தால் பிறன்மனை நயத்தல் கூடாது என்பதனையும் - சாதி சமய வேறுபாடின்றி அனைவரும் உடன் பிறந்தவர் போல் ஒன்றி வாழ வேண்டும் என்பதையும், அரிச்சந்திரன் கதையால் உண்மையே பேச வேண்டும் என்பதையும், இன்னும், இன்ன பிற வரலாறுகளால், நம் வாழ்க்கையை நன்முறையில் கடைத்தேற்ற உதவும் பல்வேறு படிப்பினைகளையும் அறிந்து பின்பற்ற வேண்டும்.

இதனால்தான், ‘சரித்திரத்தில் தேர்ச்சி கொள்’ என்னும் அறிவுரையை அளித்துப் போந்தார் பாரதியார். வாழ்க நீடூழி.

இங்ஙனம்
உன் தந்தை

மடல் - 2

காலத்தோடு செயல்

அன்புள்ள மாணவ நண்ப,

நலம். நலம் பல பெருகுக.

உன் மடல் கிடைத்தது. உனக்கு வேலை மிகுதியாயிருப்பதால் உடனடியாக மடல் எழுத முடியவில்லை என்று