பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

சுந்தர சண்முகனார்


“ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ-ஆற்றச்
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண்டார்” (1)

நல்ல பல செயல்கள் உரிய காலத்தில் செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதற்கு உரிய காரணங்களுள் சோம்பல் தலையாய காரணமாகும். இந்த மடி அதாவது சோம்பல் கூடாது என வள்ளுவர் ‘மடியின்மை’ என்னும் தலைப்பிட்டுப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். இவற்றுள் சில காண்பாம்.

குடி (குடும்பம்) என்னும் அணையா விளக்கு, சோம்பல் என்னும் சிட்டம் கட்டக் கட்ட ஒளி மழுங்கி அணைந்து விடும்-அழிந்து விடும்:

“குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்” (601)

என்பது குறள்.

தமது குடியை உயர்ந்த குடியாக்க விரும்புபவர், சோம்பலுக்குச் சோம்பல் தந்து சுறுசுறுப்புடன் இயங்குவாராக!:

“மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்” (602)

என்பது குறள்.

மடியை (சோம்பலை) மடியிலே கட்டிக்கொண்டிருக்கும் அறிவிலி பிறந்த குடி அவனுக்கும் முந்தி மடிந்துபோகும்:

“மடி மடிக்கொண் டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து” (603)

“பருவத்தே பயிர் செய்” என்னும் ஒளவையின் (ஆத்திசூடி-2) அறிவுமொழியும் ஈண்டு எண்ணத் தக்கது.