பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

சுந்தர சண்முகனார்



முன்பின் ஆய்வு இன்றித் திடீரெனத் தொடங்கின் தற்செயலாய் வெற்றி கிடைப்பினும் கிடைக்கலாம். ஆனால் உறுதியாக வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஒன்று கிடக்க ஒன்று நேர்ந்து விடலாம். எனவே, எதையும் ‘அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதையாக’ ஆக்கி விடலாகாது.

நம் செயலுக்குத் துணைபுரிய, ஆராயாமல், எவரையும் எளிதில் நம்பிவிடக் கூடாது. நம்பிக்கையானவர் எனத் துணிந்த பின்னரே சேர்த்துக் கொள்ளவேண்டும்.

திடுதிப்பென்று எதையும் தொடங்கிவிடின், பொருள் இழப்புக்கேயன்றி உயிர் இழப்பிற்கும் ஆளாக நேரிடும். ‘ஆய்ந்தோய்ந்து பாராதவன்தான் சாவ மருந்துண்பவன்’ என்பது மக்களிடையே வழங்கும் ஒரு பழமொழி. திருவள்ளுவருங்கூட இதைக் கூறியிருக்கிறாரே.

“ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்” (791)

என்பது அவரது குறட்பா.

உலகியலில், ஆராய்ந்து - சிந்தித்துப் பார்க்காமல் கொண்ட திடீர் நட்பாலும் திடீர்க் காதலாலும் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்ட எடுத்துக்காட்டுகள் மிகப் பல உண்டு.

பிறர்க்கு நல்லது செய்தல் என்னும் பெயரால் ஆராயாது எல்லாருக்குமே நன்மை செய்து விடுதல் கூடாது. இந்த நன்மையின் துணைகொண்டு, நன்மை செய்தவருக்கோ மற்றும் பிறர்க்கோ தீமை செய்யும் கொடியவர்களும் உண்டு. ஆராயாமல் அவர்க்குச் செய்த நன்மை, பாம்புக்குப் பால் வார்த்த கதையாக ஆகிவிடுவதும் உண்டு.