பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

சுந்தர சண்முகனார்



மாதா கோயில் வழிபாடு

ஏசுநாதரின் அன்னையாராகிய மரி - மேரி (MARY) என்னும் அம்மையாரைக் கிறித்தவர்கள் வழிபடுவது கண்கூடு. ‘சர்ச்சு’ (CHURCH) என்னும் ஆங்கிலப் பெயரால் குறிப்பிடப்படும் கோயில், மாதா பெயரால் மாதா கோயில் எனக் குறிப்பிடுவது எண்ணத் தக்கது. கருத்து ஒப்புமை காண்டலுக்காக மாதாகோயில் வழிபாடு ஈண்டு குறிப்பிடப்பட்டது.

நவராத்திரி வழிபாடு

கல்வியைக் கலைமகள் (சரசுவதி) ஆகவும், செல்வத்தை அலைமகள் (இலக்குமி) ஆகவும் பெண் தெய்வங்களாக உருவகித்துக் கூறுவது ஒருவகை மரபு. இந்தப் பெண் தெய்வங்கள் மூவர்க்கும் மும் மூன்று இரவு வீதம் மொத்தம் ஒன்பதுநாள் விழா எடுப்பதுதான் நவராத்திரி வழிபாடு ஆகும். நவராத்திரி=ஒன்பது இரவு. புரட்டாசித் திங்கள் அமாவாசை கழிந்த முதல் மூன்று நாள் இரவில் துர்க்கைக்கும் (பார்வதிக்கும்), அடுத்த மூன்று நாள் இரவில் திருமகளுக்கும், இறுதி மூன்று நாள் இரவு கலைமகளுக்கும் வழிபாடு நடத்துவது மரபு. இந்த முறையை மாற்றி, இறுதி மூன்று நாள் இரவு துர்க்கைக்கு உரியது என்று கூறுவாரும் உளர். ஆனால், கலைமகளுக்கு உரியதாகக் கூறுவதே பொருத்தமாகும். ஒன்பதாம் நாளாகிய மகாநவமியன்று ‘சரசுவதி பூசை’ என்னும் பெயரிலேயே தமிழகத்தில் ‘பண்டிகை’ கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளை ‘ஆயுதபூசை’ நாள் என்று கூறிப் பல்வேறு கருவிகளைப் போற்றுவதும் மரபு.

பத்தாம் நாள் விசய தசமி என்னும் பெயரில் வாழ்க்கைக்கு வெற்றி தரும் நாளாகக் கொண்டாடுவர். பிள்ளைகட்கு அந்நாளில் கல்வி தொடங்கப்பெறும்.