பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

83



மகிடாசுரனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் திருமாலிடமும், சிவனிடமும் சென்று முறையிட்டார்கள். திருமால் முகத்திலிருந்தும், தேவர்களின் முகத்திலிருந்தும் ஒருவகை ஒளிப்பிழம்புகள் தோன்றினவாம். இந்தப் பிழம்புகள் ஒன்று கூடித் துர்க்கை என்னும் பெண் தெய்வமாயிற்றாம். இராவணனை வெல்வதற்காக இராமர் கூடத் துர்க்கையை வழிப்பட்டாராம். இன்னும் எத்தனையோ கதைகள் - என்னவோ கதைகள் பற்பல கூறப்படுகின்றன.

நடை முறைப் பயன்

யார் யாருக்கோ என்ன என்ன நன்மைகளோ புரிந்த துர்க்கை, இப்போது, உரிய காலத்தில் திருமணம் ஆகாமல், முதுமையை நெருங்கிக்கொண்டிருக்கும் கன்னிப் பெண் கட்குத் தாலிப் பிச்சை போடும் தெய்வமாகக் காட்சியளிக்கிறாள். இத்தகைய பெண்கள் செவ்வாய்க் கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கு மேல் 4-30 மணிக்குள்ளான இராகு காலத்தில் துர்க்கை கோயிலுக்குச் சென்று என்னென்னவோ படையல் செய்து வழிபட்டு வணங்கி வருகின்றனர். இது மிகவும் இரங்கத்தக்க காட்சி!

‘சக்தி யின்றிச் சிவம் இல்லை’ என்பார்கள். இது, பெண் தெய்வங்களின் பெருமையைக் குறிக்கிறது. நன்மை கிடைக்கும் என நம்பி மக்கள் பெண் தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். இந்த நம்பிக்கை வீண் போகாமல் தக்க பயன் கிடைக்க வேண்டும் என்று வேண்டுவோமாக!