பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

சுந்தர சண்முகனார்



5.4 புறஞ்சேரி

கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் மதுரையின் புறநகர்ப் பகுதியில் தங்கியிருந்த செய்தியைக் கூறும் காதைக்குச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ‘புறஞ்சேரி யிறுத்த காதை’ எனப் பெயர் தந்துள்ளார். அந்தச் சேரி, அறம் புரிகின்ற நல்லோர் தவிர, மற்ற தீயோர் இல்லாததாம்.

“அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்” (195-196)

என்பது பாடல் பகுதி. அறச்செயல் புரிவோர் இருக்கும் இடமும் புறஞ்சேரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “அறம்புரி மாந்தர் அன்றிச் சேரா” என்பதிலிருந்து, அறம்புரி மாந்தர் சேரும்சேரி என்பது பெறப்படும். எனவே, சேரி என்பதைத் தாழ்ந்ததாக எவ்வாறு கொள்ள முடியும்?

5.5 காலனி,பேட்டை

நாளடைவில் பல சாதியினரும் கலந்து வாழத் தொடங்கியதால், சேரி என்னும் தொகுப்புப் பெயர் மறைந்தது. குறிப்பிட்ட ஓரினத்தார் (பறையர்) மட்டும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்வதால், சேரி என்பது, அவர்களின் குடியிருப்பை மட்டும் குறிக்கும் பெயராய் விட்டது. இப்போது சேரி என்று சொல்ல நாணி, காலணி என்றும் பேட்டை என்றும் வழங்குகின்றனர். இப்போது ‘பறையர்’ என்று சொன்னால் அரசு ஒறுக்கும் அளவுக்கு நிலைமை முற்றி விட்டது.

5.6 தொழில் அடிப்படை

தொழில் அடிப்படையில் ஏற்பட்ட சாதிப் பெயர்களில் உயர்வு-தாழ்வு இல்லை. பண் இசைப்பவன் பாணன்.