பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

147




திருக்குற்றாலம்
தென்காசி
30.1.53

அன்பான பாஸ்கரன் அவர்களுக்கு

26 ஆம் தேதி கடிதம் கிடைத்தது. கடிதம் வெகு ரசமாய் இருக்கிறது. கடிதத்தை பலராமோ நடராஜனோ வாசிக்கிறது, நண்பர்கள் கேட்டனுபவிக்கிறது என்கிற காரியமாய் இருக்கிறது. மகாராஜனும் தமக்கை வேலம்மாளும் ரொம்ப ரொம்ப அனுபவிக்கிறார்கள். பாஸ்கரனை விட்டு வெகுதொலைவுக்குப் போய்விட்டார்கள் பண்டிதர்கள் என்கிறார்கள். பண்டிதர்களை விட்டுத்தான் பாஸ்கரன் ஓடிவந்துவிட்டார்கள் என்று நான் சொல்லுகிறேன். நான் பார்க்கிற பண்டிதர்களுக்கு உண்மை வேண்டாம் உணர்ச்சி வேண்டாம், வேண்டியதெலலாம் வார்த்தைகள். அதிலும் செத்த வார்த்தைகளிடம் ஒரே மோகம். நேருக்கு நேராக எதையும் சொல்ல முடியாது. சென்னை என்று சொல்லமுடியாது, வடபாலுள்ள சென்னை என்றுதான் சொல்ல முடியும். வந்தான் அல்ல போந்தான் வேண்டும். இந்தக் கோணல்களை நிமிர்த்தல் என்பது முடியாத காரியம். பார்த்தாய்விட்டது வேண்டிய மட்டும்.

தங்கள் கடிதம் வெகுதெளிவாய் ஓடுகிறது. விஷயங்களை அப்படி அப்படியே எடுத்துக்காட்டுகிறது.

'பறக்கும் எம் கிள்ளைகாள்' மாதிரி எல்லாப் பாடல்களும் தங்களை வந்து சேருகின்றன. யாவை யாதும் இலர்க் கியையாதவே, ஏறுமின் வானத்து இருமின் விருந்தா இமையவர்க்கே, பொருள்த் தக்கீர் எல்லாம் விலாசம் விசாரித்துத் தங்களிடம் வருகின்றன. விஷயம் தெரிந்த பாடல்கள்தான், சமர்த்துத்தான்.