பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ரசிகமணி டிகேசி


வண்ணார் பேட்டை,
14.9.39

நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

குற்றாலத்திலிருந்து தங்கள் கடிதத்துக்கு எழுதிய பதிலையும் இத்துடன் அடக்கம் செய்திருக்கிறேன். நானும் மனையாளும் நடராஜனும் நாளை சென்னைக்குப் போகிறோம். இது காரணமாகத் தான் குற்றாலத்திலிருந்து அவசரமாகப் புறப்பட நேர்ந்தது. நான் அங்கு (குற்றாலத்தில்) இருக்கும்போதே தாங்கள் வராதது பெருங்குறையே. பத்தறையிலும் எட்டறையிலுமே தங்களுக்கு இடம் பண்ணி வைத்திருந்தேன். திருநெல்வேலியின் நிலையைப் பார்த்தால் குற்றாலம் சுகமாகத்தான் இருக்கும். அம்மாளுக்கு செளக்கியம் ஏற்படும் என்று நம்புகிறேன்.

பாரதி விழா எட்டயபுரத்தில் தாங்கள் எண்ணியபடி நடக்கவில்லை போலும். அதற்குப் பாத்தியாக திருநெல்வேலியில் நாலு பாரதி விழாக்கள். நாலுக்கும் நான்தான் தலைமை வகிக்கிறேன். ஆகவே கணக்குப் பார்த்தால் இன்னும் நாலு வருஷத்துக்கு நான் தலைமை வகிக்க வேண்டியதில்லை. வெளிநாட்டு நண்பர் கான்போர்ட் அங்கே வந்திருக்கிறார். எட்டறையில் இருக்கிறார். அவருக்கு வேண்டிய செளகரியங்களை பார்த்துக்கொள்ள வேணும். உடம்புக்கு அசெளகரியமாய் இருப்பதால் சாப்பாடு பத்தியம். இதோடு அவர் முத்தமிழ் வல்லார். தமிழில் வெண்ணெய், தயிர், வாழைப்பூ ஆகிய வார்த்தைகள் தெரியும். ஆகையால்தான் தங்கள் உதவி அவருக்கு அவசியமாய் இருக்கிறது.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖