பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


அடக்கத்தில் நாம் உயர்ந்திருக்கும்போது, உயர்ந்தவர்கள் என்ற நிலையைக் கிட்டத்தட்ட எட்டி விடுகிறோம்.

ப. ப


காலையும் மாலையும் உன்னிடம் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறேன். எனது கடைசிப் பாடலை, நீ செல்லுகையில் உன் குரலில் தேக்கிக் கொண்டாய்.

- கா.ப.

எனது பெயரை நான் மறந்து விடுகிறேன். பனிப் படலம் கரையும் பொழுது காலைக் கதிரவன் தெளிவுற்று இருப்பதைப் போன்று, உன் பெயரின் இனிமை என் நெஞ்சத்தில் நிறைந்து விடுகிறது.

-ப. ப

எனது இளமை வடியும்போது, எல்லாப் பொருள்களின் இசையையும் நான் கேட்க முடிகிறது. வானகம் விண்மீன்களாகிய தன் நெஞ்சத்தை என் முன்னே திறந்துவைக்கிறது.

கா. ப

தன் இயல்புக்கேற்ப, உலகம் அழகு மயமானது, மகிழ்ச்சி மயமானது.

- நினை

அமைதி கொண்டிருக்கும் இரவு, அன்னையின் அழகையும், பகல் குழந்தையின் அழகையும் தன்னிடத்து கொண்டுள்ளது.

- ப. ப