பக்கம்:இரவு வரவில்லை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14. வாராயோ


இதுநல்ல நேரம்! என்னை யறியாமல்
மதுநாறும் பூக்கள் மலர்ந்த தழைக்காட்டில்
புதுவுலகம் நோக்கிப் போகின்றேன்! வாராயோ?
அதோபார், நிலவும் எனையழைக்க வந்ததுவே!
1


கூச்சல் அடங்கிற்று! கூட்டிலோ புள்ளின்
கீச்சொலியும் இல்லை! கிளையடர்ந்த தோப்பிற்
பேச்சின்றிப் புத்துலகம் போகின்றேன்! வாராயோ?
ஆச்சென் றெனைநிலவும் அழைக்க உயர்ந்ததுவே!
2


மாலைப்பூ நாற்றத்தைத் தென்றல் வரவேற்கும்
ஓலை கொடுத்தறியா ஊருக் கழைக்குதடி!
கோலஞ்சேர் புத்துலகம் போகின்றேன்! வாராயோ?
ஆலமரத் தோப்புள் அழைக்கநிலா வந்ததுவே!
3


மாசில்லா வானத்தைப் போலே பெயரறியாப்
பேசும் புதுவுலகம் பெரியதடி! வாராயோ?
ஊசல் உலகமிது! புத்துலகோ இன்பமயம்!
பாசிக் குளத்தில் நிலவழைக்க வந்ததுவே!
4


பச்சை வயற்காடும், பழுத்த நிலப்பரப்பும்
இச்சை பெருக்குதடி! ஏகுவோம்! வாராயோ?
பிச்சை உலகமிது! பேசா உலகமது !
உச்சிக் கெனையழைக்க நிலவோடி வந்ததுவே!
5


26
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/35&oldid=1179830" இலிருந்து மீள்விக்கப்பட்டது