பக்கம்:இரவு வரவில்லை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. மறப்பதுண்டோ காதல்?

வான்சுற்றித் திரிகின்ற முகிலினங்கள் தோயும்
மலையுச்சித் தேனடையை மங்கையர்கை வீழ்த்தும்;
தேன்சுற்றி மொய்க்கின்ற வண்டினங்கள் பாடும்;
செம்போத்துப் பெடைவிளிக்கும்; மயிலினங்கள் ஆடும்;
கான்சுற்றி முழவார்க்கும் மலையருவி ஒசை
கழைச்சாரல் எதிரொலிக்கும்! கன்னியர்கண் ஒக்கும்
மான்சுற்றித் தேடுகின்ற வேடுவன்போல் வந்தேன்;
அங்கெல்லாம் உனைக்கண்டேன்! மறப்பதுண்டோ காதல்?


சீலையிட்ட காம்போடு வெள்ளாட்டு மந்தை
செடிகொடிகள் மேய்ந்திருக்கும்; கழுத்துமணி ஆர்க்கும்?
ஓலையிட்ட பெருங்குடைக்குள் அடைத்துவைத்த குட்டி
ஓயாது கூச்சலிடும்; குழலூதும் ஆயன்;
பாலையிட்ட உலைநாறும்; காட்டுமலர் நாறும்;
பைம்புதர்கள் இசைமீட்டும்; பகலொளியும் சாயும்:
மாலையிட்ட செவ்வானம் மாலையிட்டுக் காட்டும்!
அங்கெல்லாம் உனைக்கண்டேன்! மறப்பதுண்டோ காதல்?


கன்னியரின் வாயழகை மலர்பூத்த வாவிக்
கரைகாட்டும்; இடையிடையே விழிகாட்டும் நீலம்;
முன்னுயர்ந்த வானத்து வில்லழகைக் காட்டும்
முண்டியெழும் நீர்வாளை, குளம்மூழ்கும் காளை!


69
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/75&oldid=1179768" இலிருந்து மீள்விக்கப்பட்டது