பக்கம்:இரவு வரவில்லை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8. நன்றி உங்கள் வருகைக்கு!



வான்நோக்கிச் செங்கதிரோன் வருதல் உண்மை!
மலர்நோக்கித் தேன்வண்டு வருதல் உண்மை!
கான்நோக்கிப் புள்ளினங்கள் வருதல் உண்மை!
கடல்நோக்கிச் சிற்றாறும் வருதல் உண்மை!
தேன்தேக்கும் பெரும்புலவர் பாடல் கேட்டுத்
திசையுள்ளோர் அவர்நாடி வருதல் உண்மை!
நான்கண்டேன் மயிலைசிவ முத்து மேலோய்!
நன்றியுங்கள் வருகைக்கு! நன்றி! நன்றி!
1

கடல்சூழ்ந்த தமிழ்நாட்டைத் தந்தை நாட்டைக்
கனிமொழியாம் தாய்மொழியைத் தமிழை உங்கள்
உடலுயிர்போல் நனியோம்பி வருதல் கண்டேன்!
உயர்கஉங்கள் தமிழ்த்தொண்டு! தடியை ஊன்றும்
அடலேறே! மயிலைசிவ முத்தே! வாழ்க!
அருந்தமிழின் பெருவாழ்வே தமிழர் வாழ்வாம்!
படர்ந்தவிருட் பகைவீழ்த்தி முன்னோர் வாழ்ந்த
பைந்தமிழர் நாடடைவோம்! வாழ்வோம் நீடே!
2

பண்டிருந்த தமிழ்வாழ்வை எண்ணிப் பார்ப்போம்!
பழந்தமிழர் பெருநூல்கள் படித்துப் பார்ப்போம்!
வண்டலிடு காவிரியின் வளத்தைப் பார்ப்போம்!
மறத்தமிழர் வரலாற்றை நினைத்துப் பார்ப்போம்!
எண்டிசையும் புகழ்வளர்த்த நமது முன்னோர்
இன்றில்லை என்றாலும், அவர்கள் என்றும்
கொண்டிருந்த தமிழ்ப்பற்று நாட்டுப் பற்றுக்
கொண்டிடுவோம்! நாடடைவோம்! வாழ்வோம் நீடே!
3

84
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/90&oldid=1179649" இலிருந்து மீள்விக்கப்பட்டது