பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

ராணி மங்கம்மாள்

"கவலை வேண்டாம் மகனே! சீக்கிரம் தணிந்துவிடும். தலைக்குத் தண்ணீர் விட்டுவிடலாம் மகனே அதுவரை பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாயிரு" என்று அழுகைக்கிடையே அவனுக்குச் சொன்னாள் ராணி மங்கம்மாள்.

கணவன் இறந்து போனபின் அரசியல் பொறுப்புகள் அவளைக் கல்நெஞ்சக்காரியோ என்று பிறர் நினைக்குமளவுக்கு மாற்றியிருந்தன. அவள் எதற்குமே கலங்கிக்கண்ணீர் சிந்தியதில்லை. இன்று மகன் மேலிருந்த பாசத்தால் அவனை 'அழாதே! மகனே' என்று ஆறுதல் கூறிவிட்டுத் தான் சிறு குழந்தைபோல் தேம்பித் தேம்பி அழுதாள் மங்கம்மாள்.

ஒவ்வொரு வார்த்தையாகச் சிரமப்பட்டு உச்சரித்து ரங்க கிருஷ்ணன் பேசினான். குரல் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல் நலிந்து ஒலித்தது.

"அம்மா...! அன்று உலகின் நிலையாமையைப் பற்றி உங்களிடம் பேசிக்... கொண்டிருந்தபோது... யாரும் சாஸ்வதமில்லை. என்று சொன்னது நினைவிருக்கிறதா...?"

"போதுமடா மகனே! இப்போது எதற்கு அந்த அமங்கலப் பேச்சு?..."

"நன்றாகப் பழுத்த நெகிழ்ந்து காம்பிலிருந்து தானே உதிரக்கூடிய நிலையிலுள்ள... பழங்கள் உதிராமல் மரத்திலேயே தங்கிவிடுவதும், பூ, பிஞ்சு, காய் என்று இளமையானவை உதிர்ந்து விடுவதும் சகஜமானது என்று."

"போதும் நிறுத்து" என்று அவன் வாயைப் பொத்தினாள் ராணி மங்கம்மாள். மகன் நினைவூட்டிப் பேசிய வார்த்தைகள் அவளை மேலும் கலக்கின. மனத்தைத் தேற்றிக் கொள்ளுவது மிகவும் சிரமமாக இருந்தது. உள்ளே அந்தரங்கத்தில் அவளே தடுக்க முயன்றும் கேளாமல் ஏதோ இடைவிடாதபடி அழுது கொண்டிருந்தது. இரவு முழுவதும் அவள் மனத்தில் அதே இடைவிடாத அழுகை நீடித்தது.