பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

ராணி மங்கம்மாள்

பாட்டனாராகிய சொக்கநாத நாயக்கரின் பெயரைக் குழந்தைக்கு வைக்க விரும்பினாள். மகனின் ஞாபகமும் எழுந்தது. பாட்டனாரின் அரசியல் தோல்வியும் மகன் ரங்ககிருஷ்ணனின் வாழ்க்கைத் தோல்வியும் இந்தக் குழந்தைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற தயக்கம் எழவே, இருவர் பெயரோடும் விஜய் என்ற அடைமொழியையும் சேர்த்து விஜயரங்க சொக்கநாதன் என்ற புதுப் பெயரைச் சூட்ட முடிவு செய்தாள். குழந்தை பெரியவனாகி எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்புக்கும் முன்னடையாளமாக விஜய் என்பதைப் பேரில் முதலில் இணைத்திருந்தாள்.

அந்தக் குழந்தை பிறந்த தினத்தன்றே இந்தப் பெயரைத் தன் மருமகளும், குழந்தையின் தாயும் ஆன சின்ன முத்தம்மாளிடம் கூறிப் பெயர் அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று அபிப்ராயம் கேட்டாள். பெயர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சின்ன முத்தம்மாள் மறுமொழி கூறினாள். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆருயிர்க் கணவனை இழந்த துயரத்தை அவள் முற்றிலும் மறந்து தேறிவிடுவாள் என்று ராணி மங்கம்மாள் கருதினாள். அவளுக்கு நியமித்திருந்த கட்டுக்காவல்களையும் படிப்படியாகத் தளர்த்தினாள்.

"சின்னமுத்தம்மா இனி உனக்கு ஒரு கவலையும் இல்லை. உன் கணவன் ஆளக் கொடுத்து வைக்காத சாம்ராஜ்யத்தை மகன் ஆளுவான். மகனை வளர்த்துப் பெரியவனாக்கும் பொறுப்பு உனக்கு இருக்கிறது. நீ தைரியமாகவும், கவலையில்லாமலும் இருந்தால்தான் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும்" என்று அவளை உற்சாகப்படுத்த முயன்றாள் ராணி மங்கம்மாள்.

இதனால் எதிர்பார்த்த உற்சாகம் சின்ன முத்தம்மாளிடம் விளையவில்லை என்பது மங்கம்மாளுக்கு வியப்பளித்து. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை விடக் கணவனை இழந்துவிட்ட கவலையிலேயே அவள் மனம் குமைந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

"உன் மகன் பெரியவனாகி முடிசூடி இந்த நாட்டை ஆளும்போது கவலையெல்லாம் பறந்து போகுமடி பெண்ணே!"