பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

117

"இந்த அரண்மனையில் இரண்டு சாவுகளுக்கு மேல் நேர்ந்து விட்டன. தொடர்ந்து இங்கே இருப்பது உங்கள் மனவேதனையை அதிகப்படுத்தலாம். நடந்த துயரங்களை நினைவுபடுத்தி உங்களை இந்தச் சூழலே கலக்கப்படுத்தலாம். தயவு செய்து நீங்களும், குழந்தையும் இடம் மாற வேண்டும்" என்றார் இராயசம்.

ராணி மங்கம்மாள் அவரைக் கேட்டாள்.

"உங்கள் யோசனையை ஏற்கிறேன். ஆனால் எங்கே இடம் மாறுவது என்றுதான் எனக்குப் புரியவில்லை."

"நம்மைப் பொறுத்திவரை திரிசிரபுரத்தை விட்டுவிட்டால் மதுரைதான் சிறந்த இடம். மதுரைக்குப் போகலாம்."

"அங்கே போனாலும் ரங்ககிருஷ்ணனின் நினைவு என்னைக் கொல்லத்தான் செய்யும். அவனோடு சித்திரா பெளர்ணமிக்கும் மற்ற காரியங்களுக்கும் அங்கே நான் போனதெல்லாம் ஞாபகம் வரும்."

"வரலாம்! ஆனால் இங்கே திரிசிரபுரத்தில் இருப்பது போல அவ்வளவு கொடுமையாக அது இராது. மதுரை மாநகரம் இதைவிடப் பெரியது. இப்போதேகூட உங்கள் அரசியல் தலைநகரமாக இது இருந்தாலும் மதுரையே உங்களுடைய கலாசாரத் தலைநகரமாக விளங்கிவருகிறது. கோலாகலமும், கலகலப்பும், பரபரப்பும் நிறைந்த மதுரை மாநகருக்குப் போவது உங்கள் மனப்புண்களை ஆற்றக் கூடும். குழந்தையையும் நன்றாக வளர்க்கலாம்."

"மதுரையிலும் ரங்ககிருஷ்ணனின் பாட்டனார் கட்டிய பழைய மகால் அரண்மனை எனக்கு எப்போதுமே பிடிக்காது. தமுக்கம் ராஜமாளிகையில்தான் தங்கியாகவேண்டும். தமுக்க ராஜ மாளிகையின் ஒவ்வொரு தூணும் சுவரும்கூட ரங்ககிருஷ்ணனை எனக்கு நினைவூட்டாமல் விடப்போவதில்லை."

"நினைவுகள் எல்லாமே நிழலைப் போன்றவை மகாராணி நாம் எங்கெல்லாம் நடந்து போகிறோமோ, அங்கெல்லாம் அவை நம்மைத் தொடரவே செய்யும். கொஞ்சம் அடர்ந்த வெயில் வரமுடியாத பகுதிக்குப் போனால் ஒருவேளை நம் நிழல்கள் நமக்கே தெரியாமல் இருக்கலாம்."