பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

121

அதுவரை மிகப் பெரிய பராக்கிரமசாலியாயிருந்த மைசூர் மாமன்னன் சிக்கதேவராயன் டில்லி பாதுஷாவை எதிர்க்க விரும்பாமலும் முடியாமலும் சமரசம் செய்து கொண்டு கப்பம் கட்ட இணங்கிவிட்டான். தஞ்சையை ஆண்டுவந்த மராத்திய மன்னனும் டில்லி பாதுஷா அவுரங்கசீப்புக்குக் கப்பல் கட்டத் தொடங்கி விட்டான். இந்தச் சூழ்நிலையில், 'தான் என்ன செய்வது' என்று சிந்திக்கத் தொடங்கினாள் ராணி மங்கம்மாள். அவசரமாக அவள் முடிவு எடுக்க வேண்டியிருந்தது.

முன்பு தன் மகன் ரங்ககிருஷ்ணன் பட்டத்துக்கு வந்த புதிதில் பாதுஷாவின் மிதியடிகளை வணங்கக்கோரி வந்த பிரதிநிதிகளுடன் ஏற்பட்ட சச்சரவும் அதே சமயம் அந்தச் சச்சரவோடு சச்சரவாக மறுக்காமல் அவர்களுக்கு, தான் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்தியிருந்தும் ராணி மங்கம்மாளுக்கு நினைவு வந்தன. அன்று தொடங்கிய சச்சரவைத் தொடர்வதா அல்லது சமரசம் செய்து கொள்வதா என்கிற பிரச்சனை எழுந்தது.

சுற்றி இருக்கிற எல்லாரும் விட்டுக் கொடுத்து அல்லது ஒத்துப்போகிற சமயத்தில் தான் மட்டும் முரண்பட்டு எதிர்த்துக் கொள்வதற்குச் சூழ்நிலை சரியாயிருக்கிறதா இல்லையா என்பதைச் சிந்தித்தாள் அவள்.

பாய்வதற்காகப் பின்வாங்கிப் பதுங்குவதும் பதுங்குவதற்காகப் பாய்வதுபோல் சீறுவதும் அரசியலில் மிகவும் இயல்பானவை என்று அவள் அறிவாள். புதிய சூழ்நிலையை எப்படி எதிர் கொள்ளலாம் என்று ராஜ தந்திரிகளையும் அரண்மனை இராயசத்தையும் கலந்து பேசினாள். இராயசம் சொல்லலானார்.

"எதிர் கொள்கிற காரியத்தையும் அந்தக் காரியத்தின் வலிமையையும், அதை எதிர்கொள்கிற தனது வலிமையையும், எதிரிகளின் வலிமையையும் எதிரிகளுக்குத் துணையாக வரப் போகிறவர்களின் வலிமையையும் சீர்தூக்கிப் பார்த்த பின்பே இதில் ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கும்."

"சுருக்கமாகச் சொன்னால் பெரும்பாலான அரசியல் முடிவுகள் சமயோசிதமாயிருக்க வேண்டும்."