பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

ராணி மங்கம்மாள்

"அரசியல் வெற்றி தோல்விகளே சமயோசித முடிவுகளாலும், சமயோசிதமில்லாத முடிவுகளாலும் தான் வருகின்றன."

"இன்றுள்ள சூழ்நிலையில் டில்லி பாதுஷாவை எதிர்த்துக் கொள்ளாமல் கொஞ்சம் தணிந்து போவதே நல்லது."

"இப்போது நாம் டில்லி பாதுஷாவை எதிர்த்துக் கொள்ள முற்பட்டால் இங்கே யார் யார் பாதுஷாவை ஆதரிக்கிறார்களோ அவர்களெல்லாரும்கூட உடனே நம் எதிரிகளாக மாறிவிடுவார்கள். அக்கம் பக்கத்திலுள்ளவர்களையும் விரோதித்துக் கொண்டு தொலை தூரத்தில் இருக்கின்ற வலுவான எதிரிகளையும் விரோதித்துக் கொள்வது சாதுரியமல்ல."

"நம்முடைய ராஜதந்திரம் என்பது நமக்கும் நம் மக்களுக்கும், நம் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் நன்மை செய்யக் கூடியதாயிருக்க வேண்டும்."

"ஆம் ராஜதந்திரத்தில் சுயநன்மைதான் முக்கியமேயன்றிப் பரோபகாரம் முக்கியமில்லை."

"தர்மங்களைப் போல் ராஜதந்திரங்கள் நிரந்தரமாயிருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா ராஜதந்திரங்களுமே சமயோசிதமானவை, தற்காலிகமானவை."

"இந்த அளவுகோலின்படி தான் நம்முடைய இன்றைய முடிவும் இருக்கவேண்டும்" என்று தனது தீர்மானத்தை அறிவித்தாள் ராணி மங்கம்மாள். டில்லி பாதுஷாவைத் தன்னைக் கட்டிக் கொண்டு மதுரைப் பெருநாட்டையும் சுற்றுப்புறங்களையும் ஆளுவதற்காக அவனுக்குத் திறைப்பணமும் செலுத்தினாள் அவள்.

டில்லி பாதுஷாவுக்குக் கப்பம் செலுத்தி அவனுடைய நட்பையும் பாதுகாப்பையும், விரோதமின்மையையும் அநுசரணையையும் பெற்றதன் மூலம் சில தற்செயலான பெரிய ராஜதந்திர வெற்றிகள் அவளுக்குக் கிடைத்தன. மங்கம்மாளுக்குச் சொந்தமான மதுரைப் பெருநாட்டுப் பகுதிகளில் எல்லையோரத்து ஊர்களில் சிலவற்றைத் தஞ்சை வேந்தன் கைப்பற்றித் தனக்கே சொந்தமான இடங்கள் போலப் பாவித்து ஆண்டு கொண்டிருந்தான்.