பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

129

"இந்தக் குழந்தை பெரியவனாகிப் பொறுப்புகளை ஏற்றபின் ஒருவேளை உங்கள் துயரங்கள் குறையலாம் சில வேளைகளில் சிந்தித்துப் பார்க்கும்போது எனக்கே உங்கள் மேல் இரக்கமாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது. உங்கள் ஆருயிர்க் கணவர் சொக்கநாத நாயக்கர் இறந்தபோதும், நிராதரவாக விடப்பட்டீர்கள்! ரங்க கிருஷ்ணனைப் பெற்றுக் குழந்தையாக வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வாரிசு இன்றிச்சிரமப்பட்டீர்கள். ரங்ககிருஷ்ணன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பாவது உங்கள் வேதனைகள் குறையுமென்று நினைத்தேன். ரங்ககிருஷ்ணன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னும் உங்கள் நிம்மதியும் திருப்தியும் நீடிக்காமல் அற்பாயுளில் போய்விட்டன. மறுபடியும் பொறுமையாக ஒரு வாரிசை வளர்த்து உருவாக்கத் தொடங்கிவிட்டீர்கள்."

"என்ன செய்யலாம்? என் வாழ்கையே இப்படி அவலக் கதையாகிவிட்டது. என்றைக்குத்தான் இதிலிருந்தெல்லாம் விடுபட்டு ஆண்டாளையும், ஶ்ரீரங்கநாதனையும் சேவித்து அருட்பயன் பெற முடியப்போகிறதோ?"

"உங்கள் ஜாதக லட்சணம் நீங்கள் நிம்மதியாக விடுபட முயலும் போதெல்லாம் அதிகமாகப் பிணிக்கப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் பெரும்பகுதி அப்படிக் கழிந்துவிட்டது."

இந்தப் பேச்சிலிருந்து தன்மேல் இராயசத்திற்கு இருக்கும் கருணையும் அநுதாபமும் அவள் மனத்தை நெகிழ்த்தியது. நெகிழ்ந்த மனத்தோடும், விழிகளோடும் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் அவள். அந்த ஆஜாதுபாகுவான அறிவொளி வீசம் திருவுருவம் அப்போது அவளுக்கு ஆறுதளித்தது. நினைத்துப் பார்த்தபோது இவ்வளவு துயரங்களையும் தாங்கிக்கொண்டா இவ்வளவு நாள் கடத்தியிருக்கிறோம் என்று எண்ணி மலைப்பு வந்தது. கணவன் தொடங்கி அருமை மகன் ரங்ககிருஷ்ணன் வரை எல்லாருமே நாயக்க சாம்ராஜ்யப் பொறுப்புகளை நீத்து அநாதையாக அதை விட்டுவிட்டுப் போயிருப்பதுபோல் தோன்றியது. மனம் கலங்கியது.

பிஞ்சுக் கைகளை உதைத்துக் கொண்டு தொட்டிலில் கிடந்த நினைவு தெரியாப் பருவத்துக் குழந்தை விஜயரங்க சொக்க

ரா-9