பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

ராணி மங்கம்மாள்

ராஜதானியின் பிரதான வாயில் வரை எதுவும் கேள்வி முறையில்லாமல் போகவே சந்தேகமாயிருந்தது.

கல்குளம் கோட்டை வாயில் கதவுகள் கூட அகலத்திறந்து வைக்கப்பட்டிருந்தன. மதுரைப் படைத்தலைவனும் வீரர்களும் தயங்கினர்.

"தயக்கம் எதற்கு? வருக! வருக! மிகழ்ச்சியோடு வரவேற்கிறோம். மலர்ச்சியோடு வரவேற்கிறேம்."

இப்படி இந்தக் குரலைக் கேட்டுத் திகைப்புடன் பார்த்தபோது கோட்டைக் கதவருகே மன்னன் ரவிவர்மனே புன்னகையோடு நின்று கொண்டிருந்தான். விருந்தாட வந்த உறவினர்களை வரவேற்பதுபோல மதுரைப் படைத்தலைவனையும் படைவீரர்களையும் இருகரம் நீட்டி அன்பாகவும் ஆதரவாகவும் வரவேற்றான் ரவிவர்மன். படைவீரர்களுக்கு நடந்து வந்த களைப்புத்தீர உபசாரங்கள் நடந்தன. படை வீரர்கள் கோட்டைக்குள்ளேயே தங்கவைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

படைத் தலைவனை இரவிவர்மனே உடனழைத்துச் சென்று ராஜோபசாரம் செய்தான். பெரிதாகப் பீடிகை போட்டுக் கொண்டு ஆரம்பித்தான்:

"இம்முறை நீங்கள் மதுரைப் பெருநாட்டுக்குச் சேர வேண்டிய திறைப் பொருளைப் பெற்று செல்ல வந்ததாக மட்டும் நினைக்காதீர்கள்! மதுரைப்பெருநாட்டின் மேலாதிக்கத்தையும் என்னையும் பிடிக்காத சிலரை ஒழித்துக் கட்டவும் உங்கள் உதவி எனக்குத் தேவை. என்னுடைய ஜன்மவைரிகளான எட்டுவீட்டுப் பிள்ளைமார்களைத் தொலைத்தாக வேண்டும். மதுரைப் படைத் தலைவராகிய நீங்கள் வருஷந்தவறாமல் இங்கு என்னைத் தேடிவந்து திறைப்பணம் வாங்கிச் செல்கறீர்கள். இப்படி நேராமல் ஆண்டு தோறும் திறைப் பணமே உங்கள் இருப்பிடத்திற்குத் தேடி வந்து விடும்படியாகச் செய்ய என்னால் முடியும். என்னைத் தலையெடுக்கவே விடாமல் இடையூறுகள் செய்து கொண்டிருக்கும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழிப்பதற்கு ஒத்துழைத்தீர்களானால் நான் அதைச் செய்துவிடுவேன்."