பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

ராணி மங்கம்மாள்

உடனே மதுரைப் படைகளை அழிக்காவிட்டால் கொடுத்த வாக்கின்படி அவர்களுக்குப் பாதி ராஜ்யத்தைத் தர நேருமோ என்று பயந்தே ரவிவர்மன் இப்படிச் செய்திருந்தான். 'எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழித்த கையோடு இனி உடனே ஆயுதமேந்திப் போர் புரியும் அளவு எதிரிகள் இல்லை'-என்ற நம்பிக்கையோடு உறங்க முற்பட்டிருந்த மதுரைப் படைகள் இரவிவர்மனின் திடீர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் புறமுதுகிட்டு ஓட நேர்ந்தது. ஓடியவர்களையும் துரத்திக் கொல்லுமளவு கருணையற்றிருந்தான் ரவிவர்மன். பலரை ஈவு இரக்கமின்றிக் கொன்றும் விட்டான். ரவிவர்மனின் இந்தப் பச்சையான நம்பிக்கைத் துரோகம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் புறமுதுகிட்டு ஓடிய மதுரைப்படையில் சிலரே மதுரை வரை உயிரோடு திரும்பித் தப்ப முடிந்தது.

தப்பியவர்கள் மதுரை நகரையடைந்ததும் ராணி மங்கம்மாள் அப்போது மதுரையில் இல்லை என்பது தெரிந்தது. ராணி விஜயரங்கனோடும் பரிவாரங்களோடும் திரிசிரபுரம் போயிருந்தாள். செய்தியின் அவசரமும் அவசியமும் கருதித் திரிசிரபுரத்திற்குத் தூதர்கள் விரைந்தனர். ரவிவர்மனின் நம்பிக்கைத் துரோகம் ராணி மங்கம்மாளிடம் தெரிவிக்கப்பட்டது.

ரவிவர்மனின் துரோகம் பற்றிய இச்செய்தி அவளை அடிபட்ட புலியாக்கியது. செய்தியை அவளறிந்தபோது நள்ளிரவு. நேரத்தைப் பொருட்படுத்தாமல் உடனே இராயசத்தையும் பிரதானிகளையும் வரவழைத்து ஆலோசனை செய்தாள். தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுத்து ரவிவர்மனை ஒடுக்குவது என்று அவளும் இராயசம் முதலிய பிரதானிகளும் ஒரு நிச்சயமான முடிவுக்கு வந்தனர்.

அதிவீர பராக்கிரமசாலியான தளவாய் நரசப்பய்யாவின் தலைமையில் மற்றொரு மாபெரும் படையைத் திருவாங்கூருக்கு அனுப்ப ஏற்பாடாயிற்று.

"பிறர் செய்யும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். துரோகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது-கூடாது" என்று