பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

ராணி மங்கம்மாள்

ராணி மங்கம்மாள் சிறைப்படுத்தப்பட்டிருந்த அறை வாசலில் அறுசுவை உணவை அவள் பார்வையில் படும்படி வைக்கச்சொல்லி அவளுக்கு உண்ணக்கொடுக்காமல் தவிக்க விடச் செய்தான் விஜயரங்கன்.

பசியையும் தாகத்தையும் விடக் கொடியது பசிக்கும் தாகத்துக்கும் அருமருந்தான உணவையும் நீரையும் எதிரே வைத்துவிட்டு உண்ணவும், பருகவும் விடாமல் தடுப்பது தான். அந்தக் கொடுமையைத் தன் பாட்டிக்குச் செய்து அவள் பசியாலும் தாகத்தாலும் தவித்துத் துடிதுடிப்பதைத் தன் கண்களாலேயே பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான் விஜயரங்கன்.

"அட பாவி! உனக்கு நான் மனத்தாலும் கெடுதல் நினைத்ததில்லையே? என்னை ஏனடா இப்புடிச் சித்ரவதை செய்கிறாய்! தெய்வந்தான் உன்னைக் கேட்க வேண்டும்" என்று அவனை நோக்கிக் கதறினாள் ராணி மங்கம்மாள். அவனோ அவள் கதறலைக் கேட்ட பின்பும் அட்டகாசமாக ஆணவச் சிரிப்புச் சிரித்தான்.

"பட்டால்தான் பாட்டி உனக்குப் புத்தி வரும். நன்றாகப் படு! அப்போதுதான் உன் தவறுகளை நீயே உணரமுடியும்" - என்று ஆத்திரத்தோடு கூறினான்.

மங்கம்மாள் ஈனஸ்வரத்தில் பதில் கூறினாள். "இதற்கெல்லாம் அடுத்த ஜன்மத்தில் நீ அநுபவிப்பாய்! கடவுள் உன்னைச் சும்மா விடமாட்டார்."

"இந்த ஜன்மத்தில் நான் சாந்தேஷப்பட வேண்டும். அதற்கு நீங்கள் இடையூறாக இருந்தீர்கள் அதனால் தான் உங்களைச் சிறையில் அடைத்திருக்கிறேன். அடுத்த ஜென்மத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி இப்போது நான் கவலைப்படவில்லை."