பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

221

"அன்னமிட்ட கைக்குத் துரோகம் செய்கிற யாரும் உருப்பட்டதில்லை!"

"பிள்ளைக்கும் பேரனுக்கும் கிடைக்க வேண்டிய ஆட்சியைக் கிடைக்க விடாமல் செய்து, தானே ஆட்சியின் சுகத்தை அநுபவிக்க விரும்புகிறவர்களும் உருப்படமாட்டார்கள். இப்போது நீங்கள் அடைந்திருக்கும் இதே கதியைத் தான் அடைவார்கள்..."

"அட துரோகி! என்னைப் பற்றிக் கெட்ட நோக்கம் கற்பித்தால் உன் நாக்கு அழுகிப் போய்விடும். தக்க தருணத்தில் உன்னிடம் ஒப்படைப்பதற்காகத்தான் முள்ளைச் சுமப்பதுபோல் இந்த ஆட்சியைச் சுமந்து வந்தேன். அதற்குள் நீ அவசரப்பட்டுவிட்டாய்!"

அப்போது அவளுடைய எந்தப் பதிலும் அவனைச் சமாதானம் அடையச் செய்ய முடியவில்லை. அவன் ஆத்திரம் தணியாதவனாகவே அவள் முன் நின்றான். அவளை ஒரு சிறிதும் பொருட்படுத்தாமலே புறப்பட்டுச் சென்றான். உணவையும், தண்ணீரையும் கண் முன்னால் காண்பித்துவிட்டுக் கொடுக்காமலே அவளை வதைக்கும் சித்திரவதை தொடர்ந்தது. அடையாளம் அறியமுடியாதபடி எலும்பும் தோலுமாகியிருந்தாள் அவள். அப்படியும் பேரப்பிள்ளையாண்டானுக்கு அவள்மேல் இரக்கம் வரவில்லை. விஜயரங்கன் சென்ற பின் உணவும் தண்ணீரும் கொண்டு வந்து திரும்ப எடுத்துச்செல்லும் காவலாளி மெளனமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடியே எடுத்துச் செல்லுவதைக் கண்டு பேரனுக்கு இல்லாத இரக்கம் அவனுள் இருப்பதைத் தெரிந்து கொண்டாள் ராணி மங்கம்மாள்.

இப்படியே ஒரு திங்கள் காலத்துக்கு மேல் கழிந்து விட்டது. ஒரு மாறுதலும் நிகழவில்லை. ராணி மங்கம்மாள் மெல்ல மெல்லத் தேய்ந்து ஒடுங்கியிருந்தாள். இப்போது விஜயரங்கன் அவளைச் சிறை வைத்திருந்த இடத்துக்கு வந்து பார்ப்பது கூட நின்று போயிருந்தது.