பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

85

பாராட்டவேண்டும். எப்போது இங்கே புதிதாகக் கோயில்களைக் கட்டினார்கள்?"

"அப்படிக் கேளுங்கள் சொல்கிறேன். இந்த நிலங்கள் கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமானவை. யுத்த காலங்களில் கலவரங்களுக்கும், மதப் பூசல்களுக்கும் பயந்து அவர்கள் எங்கெங்கோ சிதறி ஓடிவிட்டார்கள். அவர்கள் திரும்பி வருவதற்குள் இங்கே கோயில்களைக் கட்டிவிட்டதால் இனிமேல் அப்புறம் யாரும் நம்மை அசைக்க முடியாது ஐயா!"

"இன்னொருவருக்குச் சொந்தமான நிலத்தை நாம் ஆக்கிரமிப்பது பாவமில்லை?"

"ஒரு புண்ணிய காரியத்தை நிறைவேற்றுவதற்காகத்தானே அவசர அவசரமாக இந்தப் பாவத்தைச் செய்திருக்கிறோம்!"

"புண்ணியத்துக்காகச் செய்யப்படும் பாவ காரியங்கள் தவறில்லை என்பது தங்கள் கருத்து போலிருக்கிறது?"

"பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" என்று வள்ளுவர் பெருமானே கூறியிருக்கிறாரே? சர்வேசுவரனைக் குடியேற்றும் கைங்கர்யத்தில் பாவம் ஏது? பரிகாரம் ஏது?-

இதற்கு பதிலாக ஏதும் கூறாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான் மாறுவேடத்திலிருந்த ரங்ககிருஷ்ணன். தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற பாணியில் பெருவாரியான மக்கள், நியாயத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருப்பது நிதரிசனமாகத் தெரிந்தது. தாயிடம் விவரங்களைத் தெரிவித்தான். "தீர விசாரித்து எது நியாயமோ அதைச் செய்" என்றாள் அவள். நில உடைமைக் கணக்குகளையும், விவரங்களையும் கவனிக்கும் ஆவண அதிகாரிகளை அழைத்து அப்படிக் கோயில்கள் கட்டப்பட்டிருக்கும் நிலங்களின் உரிமைச் சாஸனங்களைப் பார்த்து விவரம் கூறுமாறு கட்டளையிட்டதில் அவர்கள் கூறிய விவரம் கிறிஸ்தவர்களுக்குச் சாதகமாயிருந்தது.