பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

ராணி மங்கம்மாள்

கிழவன் சேதுபதியின் மறவர் சீமையில் கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றித் தான் முன்பு கேள்விப்பட்டிருந்தவை. ரங்ககிருஷ்ணனுக்கு நினைவு வந்தன. நாயக்கர் வமிசத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவன் எண்ணினான். பாதிரியார் மூலம் நிலங்களை இழந்து பாதிக்கப்பட்ட ஏழைக் கிறிஸ்தவ மக்களைக் கூப்பிட்டுச் சந்தித்தான். அவர்கள் இப்போது அநாதைகளாகத் தெருவில் நிற்பது புரிந்தது. இன்னொரு கவலையும் அவனுக்குள்ளே இருக்கத்தான் செய்தது. கட்டிய கோயில்களையும், பூஜையிலுள்ள விக்கிரகங்களையும் ஓரிடத்தை விட்டு அப்புறப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். அதைச் செய்ய முயன்றால் பெருவாரியான மக்களின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள நேரிடும் என்பதையும் அவன் உணர்ந்துதான் இருந்தான்.

இதில் யாருக்கு நியாயம் வழங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருந்தாலும் தேவாலயங்களைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து நிர்வகித்து வருபவர்களையும் கூப்பிட்டு விசாரித்துவிட எண்ணினான் ரங்ககிருஷ்ணன். அவர்களைக் கூப்பிட்டனுப்பினான்.

மாறுவேடத்தில் அவன் அந்த தேவாலயங்கள் இருந்த பகுதிக்குப் போயிருந்தபோது அவனோடு உரையாடியிருந்த அந்தப் பரம பக்தர் உட்படப் பலர் வந்திருந்தார்கள். அவர்களில் யாரும் தாங்கள் செய்தது தான் நியாயம் என்பதாக வாதிடுவதற்குப் பதில், "தெய்வ கைங்கரியம் நடந்து முடிந்துவிட்டது இனிமேல் எதுவும் செய்யமுடியாது. பிரதிஷ்டைசெய்த மூர்த்திகளை இடம்பெயர்த்துக் கொண்டு போவது என்பது சாத்தியமில்லை வேண்டுமானால் அந்தத் கிறிஸ்தவர்களுக்கு வேறு இடங்களில் நிலம் ஒதுக்கிவிடுங்கள்"- என்றுதான் வாதிட்டார்கள். இனிமேல் தங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பு அவர்களிடம் இருப்பதைக் கண்டான் அவன்.