பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

ராணி மங்கம்மாள்

"நீதியோ அநீதியோ கட்டிய கோயிலை இனிமேல் என்ன செய்யமுடியும்? சாஸ்திர சம்மதமாகிவிட்ட ஒரு நிறைவேறிய காரியத்தைக் குறை சொல்லிப் பயனில்லை."

"நியாயமும், சாஸ்திரமும் வேறு வேறானவை என்று நான் நினைக்கவில்லை பெருமக்களே!"

"சாஸ்திரம் என்ன சொல்லுகிறதோ அதற்கு நியாயமும் கட்டுப்பட்டாக வேண்டும்."

"நியாயத்துக்குப் புறம்பான ஒன்றை சாஸ்திர, அங்கீகாரம் பெற்றதென்று நீங்கள் கட்டிப் பிரதிஷ்டை செய்து வழிபடுகிற தேவாலயங்களில் உள்ள சர்வ சக்தியும் வாய்ந்த தெய்வங்கள் கூட ஒப்புக்கொள்ளப் போவதில்லை..."

அரசர் தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பது வந்தவர்களுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. உடனே வாதிடுவதை விடுத்து அவனைத் தன்னைக் கட்டிக்கொண்டு காரியத்தை சாதிக்க முயன்றார்கள் அவர்கள்.

"எப்படியோ கட்டிய கோயிலை ஒன்றும் செய்ய முடியாது அரசே!”

இதற்கு ரங்ககிருஷ்ணன் மறுமொழி எதுவும் கூறவில்லை. அவர்களை உறுத்துப் பார்த்தான். முகபாவத்திலிருந்து அவன் உறுதியானதொரு முடிவுக்கு வந்துவிட்டான் என்று புரிந்தது.

"தயை கூர்த்து அரசர் கருணை காட்டவேண்டும். அரசராகிய தாங்களும் மக்களாகிய நாங்களும் எந்தத் தெய்வங்களை வழிபட்டு அருள் வேண்டுகிறோமோ அதே தெய்வங்களுக்குத்தான் நாங்கள் கோயில் கட்டியிருக்கிறோம்."

மறுபடியும் அவர்களைக் கடுமையாக உறுத்துப் பார்த்தான் அவன்.

"கும்பாபிஷேகம் செய்து முறைப்படி குடியேற்றிவிட்ட மூர்த்திகளை இனி எங்கே கொண்டு போக முடியும் அரசே?"