நா. பார்த்தசாரதி
97
இருக்க வேண்டும் என்று சொல்வதால் நான் பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படலாம் அல்லவா?”
"அதுவும் பெண்ணாகப் பிறந்து என்னைப் போல் கஷ்டப்பட வேண்டுமா?"
"நீ இப்போது என்ன கஷ்டப்படுகிறாயாம்?"
"என்ன கஷ்டப்படவில்லையாம்?"
"பட்டத்தரசியாயிருப்பது கஷ்டமா? அரண்மனை வாசம் கஷ்டமா? புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் மருமகளாக இருப்பது கஷ்டமா!"
"உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வதுதான் இப்போது கஷ்டம்" என்று சொல்லிப் புன்னகை பூத்தாள் சின்னமுத்தம்மாள்.
"ஒரு நாளும் ஒரு விதத்திலும் உனக்குக் கஷ்டம் வராமல் நான் பார்த்துக் கொள்வேன் முத்தம்மா! கவலைப்படாதே"
என்று அவளுக்குப் பதில் கூறி ஆதரவாக அழைத்தபடி அவளை உள்ளே அழைத்துச் சென்றான் ரங்ககிருஷ்ணன்.
"பெண்கள் எல்லோரும் ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படுகிறார்கள். ஆண்கள் எல்லோரும் பெண் குழந்தைகளுக்கு ஆசைப்படுகிறார்கள்" என்று போகிறபோது சிரித்தபடி அவனிடம் கூறினாள் முத்தம்மாள்.
மறுநாள் காலை பொழுது விடிந்தது முதல் ரங்க கிருஷ்ணனுக்குக் காய்ச்சல் போல உடல் சூடேறிக் கொதித்தது. முதலில் கழுத்தில் வீங்கினாற்போல் ஓர் ஊற்றம் தெரிந்தது. பொன்னுக்கு வீங்கி என்றார்கள். கண்களில் எரிச்சல் தாங்க முடியவில்லை. உணவு செல்லவில்லை. எல்லாமே கசந்து வழிந்தன. வந்திருக்கும் நோய் என்ன வென்று யாருக்கும் புரிந்து கொள்ள முடியாமலிருந்தது.
முகத்திலும் உடம்பிலும் முத்து முத்தாக வெடித்த பின்பே அவனுக்குப் பெரியம்மை போட்டிருப்பது புரிந்தது. முதலில் இலேசாகத் தென்பட்ட அம்மை முத்துகள் அடுத்த நாள் அருநெல்லிக்காயாக உடல் முழுவதும் அப்பி மொய்த்திருந்தன.