பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகக் காப்பியங்களோடு கம்பராமாயணத்தை ஒப்பிட்டுக் கம்பரின் ஏற்றத்தினைக் காட்டினார் வ.வே.சு ஐயர், சமண பெளத்த சமயங்களிடையே வழங்கும் இராம கதையோடு கம்பராமாயணத்தை ஒப்பிட்டுக் கம்பரின் தனிச் சிறப்பினைப் போரப்பொலிய வரைந்துள்ளார் பேராசிரியர் அ.ச. ஞா. வான்மீகம், புத்தசாதகக் கதைகள், பெளம சரிதம், பத்ம புராணம் இவற்றை அடியொற்றிக் கம்பர் இராமனை மனிதனாகக் காட்டுகிறார் என்றும், தமிழ்நாட்டுக் கொள்கையையொட்டி அவனைக் கடவுளாகக் காட்டுகிறார் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். வான்மீகியின் மனித இராமனைத் தெய்வமாக உயர்த்தி ஆராதனை புரிந்தவர்கள் ஆழ்வார்கள் என்பர் சிலர். இதனை மறுத்து ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே இராமன் கடவுளாகக் கருதப்பெற்றான் என்பதை அருமையாகத் தெளிவுபடுத்தியுள்ளார். சிலம்பில் வரும் நெடுமொழி என்னும் சொல்லைக் கொண்டு இராமன் திருமாலின் திருத்தோற்றம் என்னும் கருத்துக் கிறித்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழகத்தில் நடையாடியது என்று காட்டுவது மனங்கொளத் தக்க இனிய ஆய்வு முடிவு. கம்பநாடர் இராமனைக் காப்பியத் தொடக்கத்தில், "முப்பரம்பொருளுக்கு முதல்வன்", "எமை உடை இறைவன்" என்னும் தொடர்களாலும், இறுதியில் "இவனோதான் அவ்வேத முதற்காரணன்" என்னும் தொடராலும் குறித்து, அவன் பரம்பொருள் என்பதனை உணர்த்தியுள்ளார். இராமன் பரம்பொருளாக இருத்தலால்தான் அவன் வடிவழகினைப் பெண்களால் முடியக் காணமுடியவில்லை என்பதனைப் பேராசிரியர் செலச் சொல்லியுள்ளார். இதனை எண்ணிலி (Infiniti) என்னும் கணிதக் குறியீடு கொண்டு விளக்குவது பேராசிரியரின் தனி முத்திரை பதிந்துள்ள இடம், இராமன் முடிசூடப் போகிறான் என்ற பொழுதும், அவன் காடேகும் பொழுதும் மக்கள் உள்ளத்தில் ஏற்பட்ட