பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் 38 173 சீதையின் ஊடலைத் தணிக்கக் கருதிய இராமன் இலக்குவனை நோக்கி, வீரனே! நானே இம் மானைப் பற்றிக் கொணர்வேன். சீதையைக் காத்து நிற்பாயாக" (3804) என்று புறப்படத் தயாரானான். அறிவின் துணைகொண்டு விருப்பு வெறுப்பின்றி ஆராயும் பழக்கத்தை அண்மையில் பழகிக்கொண்ட இலக்குவன் புறப்பட்டுவிட்ட இராமனின் பின்னர் நின்று கொண்டு "அண்ணலே! விசுவாமித்திர யாகத்தில் எதிர்த்து வந்த மூன்று சகோதரர்களில் இருவர் இறந்து போக, மாரீசன் என்பவன் தப்பிவிட்டான் அல்லவா? அவன்தான் இவன் என்று கருதுகிறேன்” என்று கூறிக் கையைத் தலைமேல் வைத்து வணங்கினான். (3805) அவன் வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்ளாத இராகவன் மானின் பின்னே புறப்பட்டுப் போய்விட்டான். இக்கட்டுரையின் தொடக்கத்தில் சராசரி மனிதனாக இராமனையும் சராசரிப் பெண்ணாகச் சீதையையும் கற்பிக்கிறான் என்று சொல்லப் பெற்றது. மனிதனாக நடந்து கொள்ளும் இராகவன், இந்த வினாடிவரை உணர்ச்சி வசப்பட்டு அறிவுதொழிற்படாத வகையில் எச்செயலையும் நிகழ்த்தியதாக ஒரு நிகழ்ச்சிகூட அமையவில்லை. "மெய்த்திருப் பதம் மேவு என்ற போதினும், இத்திருத்துறந்து ஏகு என்ற போதினும்” அறிவு என்ற அங்குசத்தைப் பயன்படுத்தி, ‘நடப்பது நடந்தே தீரும் என்று தொழிற்பட்ட இராமனைத்தான் இதுவரை கண்டுவந்திருக்கிறோம். இப்பொழுது நிலைமை மாறுகிறது. அரண்மனையில் இராஜபோகத்தை அனுபவித்துக்கொண்டு தோழியர், பணிப் பெண்கள் என்பவர்களிடையே கொலுவீற்றிருக்கவேண்டிய பிராட்டி, இவை எதுவும் இன்றிப் பேச்சுத்துணைக்குக்கூட இராமனை அன்றி வேறுயாரும் இல்லாத நிலையில் இருந்து வருகிறாள். இந்த மனநிலையில் பொன்மான் கிடைத்தால் பொழுதுபோக்க வசதியாக இருக்கும் என்று அவள் நினைத்ததில் தவறில்லை. எனவே, தன் தலைவனிடம் அந்த மானைப் பிடித்துத் தா என்று கேட்டதில் தவறில்லை.