பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 38 இராமன் - பன்முக நோக்கில் இவ்வளவு விரிவாகக் காரண, காரியங்களுடன் தருக்கரீதியாகப் பேசி தாடகையைக் கொல்வது நியாயமானதே என்று விசுவாமித்திரன் கூறியும் இராகவன் அதனை ஏற்றுக் கொண்டதாகவோ செயல்படத் தொடங்குவதாகவோ தெரியவில்லை. இந்த நிலையில் விசுவாமித்திர்ன் செய்யத்தக்கது ஒன்றுதான். இறுதியாக இராமன் மனங்கொள்ளுமாறு ஒன்றைச் சொல்ல வேண்டும். தான் இந்த முடிவுக்கு வந்ததில் தன்னலமோ, தனிப்பட்டு அவள்மேல் வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ சினமோ இல்லை என்பதையும், இரண்டு பக்கத்தையும் சீர்தூக்கிப் பார்த்து ஆற அமர, நடுவுநிலைமையோடு யோசித்துப் பிறகுதான் இம்முடிவு எடுக்கப்பட்டது என்பதையும் மிக ஆணித்தரமாக விசுவாமித்திரன் கூறுகிறான். "ஈறுஇல்நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட் சீறி நின்று இதுசெப்புகின்றேன் அலேன்; ஆறிநின்றது அற்ற அன்று அரக்கியைக் கோறி" என்று, எதிர் அந்தணன் கூறினான்". - கம்ப 382 ஏற்கவில்லை; ஆனாலும்..... விசுவாமித்திரன் இத்துணை கூறிய பின்பும் இராமன் அதை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக வேறு ஒரு முறையை மேற்கொண்டு விசுவாமித்திரன் செய்யச் சொன்னதைச் செய்வதாகக் கூறுகிறான். இராமனுடைய சொற்களில் ஒரு புதுமை வெளிப்படுகிறது. அவன் பேசியனவாவது: " ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும் எய்தினாய், "அது செய்க!" என்று ஏவினால், மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு என்றான்" - கம்ப. 383