பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 38 இராமன் - பன்முக நோக்கில் எப்படி இந்த நாளைக் குறித்துக் கொடுத்தான் என்ற ஐயம் சோதிடம் அறிந்தவர்கள் மனத்தில் எழுதல் இயற்கை அனந்தசயனத்தைவிட்டு பிராட்டியையும் பிரிந்து இம் மண்ணிடை வந்த பெருமான், தசரதனின் பிள்ளை இல்லாக் குறையைப் போக்க வரவில்லை. தசரதனுக்கு வாரிசாக மணிமுடி கவித்துக் கொண்டு நாடாளவும் வரவில்லை. எனவே, முழுதுணர் முனிவனாகிய அவன், வெளியில் யாரும் அறியாத முறையில் அவதார நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அதில் ஒரு பகுதியைத்தான் விசுவாமித்திரன் செய்துமுடித்தான். எஞ்சிய பகுதியை வசிட்டன் செய்து முடிக்க வேண்டும். அந்த முறையில் தான் மறுநாளே நல்ல நாள் என்று கூறினான். அதற்கு மற்றொரு காரணம் உண்டு. அவன் நல்ல நாள் என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே கைகேயி மனம் திசை திருப்பப் பெற்றுவிட்டது. இராகவனை வனத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் மனம் முழுதும் ஈடுபட்டிருந்த நேரத்தைப் பயன்படுத்திகொண்டே காரியம் நடைபெற வேண்டும். அதற்கு ஒரே வழி மறுநாளே முடிசூட்டுவிழா என்று சொல்லி, அதற்குரிய சடங்குகள் அனைத்தையும் உடனே தொடங்கிச் செய்துவிட்டான் வசிட்டன். அந்த மகிழ்ச்சியோடு தசரதன் கைகேயி கோயிலை அடைய வேண்டும் என்றும் வசிட்டன் விரும்பிக் காரியங்களைச் செய்தான். எனவே, கைகேயி, சூர்ப்பனகை, மாரீசன் என்பவர்கள் அவதார நோக்கம் நிறைவேற நேரிடையாகப் செயல்பட்டது போல, வசிட்டன் மறைமுகமாகச் செயல்பட்டான். இந்த விளக்கம் காப்பியப் போக்கையும் அமைப்பையும் வைத்துக் கொண்டு தந்த விளக்கம் ஆகாது. காப்பியப் போக்கில் ஏதோ ஒரு பெரிய காரியம் நிறைவேற ஒவ்வொருவரும் தம்மையும் அறியாமல் எப்படிச் செயல்படுகின்றனர் என்பதைக் காட்டவே இந்த விளக்கம் தரப்பெற்றது.