பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 38 இராமன் - பன்முக நோக்கில் தசரதன் முடிசூடலுக்கு நன்னாளைக் கணித்துத் தருக என்று வேதியர்களைக் கேட்டவுடன் ஒரு கணமும் யோசியாமல் 'நாளையே நன்னாள் (கம்ப . 1408) என்று விடை கூறினர். அவதார நோக்கம் நிறைவேற, விரைவாக முடிசூட்டு விழா நடைபெற ஏற்பாடுகள் செய்வதே நோக்கம் போலும். இந்த அடியில் 'திருந்தினார்' என்று கம்பன் குறிப்பது வசிட்டனை ஒத்த முக்காலமும் உணர்ந்த, ஆனால் நாட்டில் இல்லறத்தில் வாழ்கின்ற அந்தணர்களையே ஆகும். மகளிர் சீதையை ஒத்தார் என்று கூறுவது புதுமையிலும், விழாக்களிலும் பெரிதாக மகிழ்ச்சி அடையும் பெண்களைப் பற்றிக் கூறியதாகும். முடிசூட்டு நிகழ்ச்சியைக் குறிக்கும்போது திருமகளை மன்னன் மணப்பது என்று சொல்வது மரபாகும். ஆதலால், இராமன் மனைவியாகிய சீதை இலக்குமியை ஒத்தாள் என்று கூறினான். நகர மக்கள் மகிழ்ச்சியிலும் இத்தனை விதங்கள் இருந்தன என்பதை இந்த ஒரே பாடலில் கூறுகிறான் கம்பன். இராமனுடைய பட்டாபிஷேகத்தைக் காண வந்தவர்கள் யார்? என்று வரிசைப் படுத்திக் கூறும், "நலம்கிளர் பூமி என்னும் நங்கையை நறுந்துழாயின் அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார். இலங்கையின் நிருதரே இவ் ஏழ் உலகத்து வாழும் விலங்கலும், ஆசை நின்ற விடா மத விலங்கலேயால்" . கம்ப. 1565 என்ற இப்பாடலில் இரண்டு கருத்துகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கன. முடிசூட்டிக்கொள்ளப் போகிறவன் யார்? என்பதைக் கூறவந்த கவிஞன், நறுந்துழாயின் அலங்கலான் என்று குறிப்பிடுவதால் மகாவிஷ்ணுவே இராமனாக வந்தவர் என்ற கருத்தைத் தெரிவிக்கின்றான் கவிஞன். அன்றியும், "திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனே'