பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 38 இராமன் - பன்முக நோக்கில் என்பதை மறைமுகமாகவும், தருக்கரீதியாகவும் கம்பன் காட்டிவிடுகிறான். பட்டம் ஏற்கச் சென்றபொழுதும், அதை இழந்தான் என்று கேள்விப்பட்ட பொழுதும், இழந்து வருகின்றவனைக் கண்ட பொழுதும் அயோத்தி மக்கள் அடைந்த மனநிலையைக் கூறுவதிலும் கம்பன் ஒரு துணுக்கத்தைச் செய்கிறான். அரசர்கள் வருவதும் போவதும் குடிமக்களைப் பொறுத்தமட்டில் எங்கோ, யாருக்கோ நடக்கின்ற நிகழ்ச்சி ஆகும். இதற்கு மாறாக இராமனிடம் மக்கள் காட்டும் அன்பு தங்கள் நெருங்கிய உறவினன், அதாவது இரத்தக் கலப்புடைய ஒர் உறவினன்மாட்டுக் காட்டப்படும் அன்பைவிட அதிகமாக உள்ளது என்றால், இராமனை அரசகுமாரன் என்ற அளவில் அவர்கள் போற்றவில்லை. தங்கள் உயிர்களுக்கு உள்ளே உறையும் பரம்பொருள் தங்கள்மாட்டுக் கொண்ட கருணையால் வடிவுபெற்று வெளியே வந்து உலாவுகின்றதென்று உறுதியாக நினைத்து நம்பியே அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதையே நமக்கு இராமாவதாரக் காப்பியம் அறிவுறுத்துகிறது. தொடக்கத்திலேயே இவ்வளவு அற்புதமான முறையில் இராமனைப் படைக்கிறான் கம்பன் என்பதை அறியும்பொழுது, அந்த ஈடுஇணையற்ற இராமனுடைய பல்வேறு செயல்களையும் கூர்ந்த காணவேண்டும் என்ற எண்ணத்தை நம்முள் உண்டாக்கிவிடுகிறான் கம்பன். இனி வரும் பகுதிகளில் கம்பன் படைத்த இராமன் தன் தந்தை, தாய், மனைவி, நண்பர்கள், முனிவர்கள் என்பவர்களோடு எப்படிப் பழகுகிறான் என்று கம்பன் காட்டும் முறையில் காண்பதே நம் நோக்கமாகும்.