பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் மேலோங்கியிருப்பதோடு அமையாது, இயல்பாய்த் தம் எழுச்சிக்கு விட்டுக்கொடுக்கும் பிற பண்புகளை மேலும் அடக்கி, அவற்றை வேரறுத்துத் தம் ஆட்சியைத் தாபிக்க முயலும். இவ்வாறு நேரும் சமயங் களில் உயர்ந்தெழும் பண்புகளுக்கும் பிற பண்பு களுக்கும் போராட்டம் நிகழும். இதுவே அவலச் சுவையை - கலப்பற்ற செம்மையான அவலச் சுவையை - பயக்கும் பண்பு வாய்ந்தது. இயற்கை வரைந்த எல்லையை மீதுார்ந்து செல்லும் பண்புகளையுடையவரே பெரியோராய்த் திகழ்வர். அவ்வாறு மீதுார்வது நற்பண்பாயின் ஆத்துமாக்கள் மகாத்துமாக்களாகவும், தீப்பண்பாயின் துராத்துமாக்களாகவும் மாறுகின்றன. நற்பண்புகள் மீதுார்வதால் மக்கள் மகாத்துமாக்களாக மாறுகின்றார் களேயன்றி, அவர்கள் வாழ்க்கையுள்ளும் அந்நற் பண்பு இயற்கையை இறந்த அளவுக்கு வளர்ந்து விடுவதால், அது முதலில் தன்னோடு போரிடும் பிற பண்புகளை அழித்துவிட்டுப் பின்னர் இலக்கு ஒன்றும் அகப்படாமல், தன்னை வளரவிட்டவனையே பலி கொள்ளும். இதுவே அவலச் சுவையின் மாட்சி. இக்காரணம்பற்றியே அவலச் சுவை மிகச் சிறந்த இன்பத்தைப் பயக்கும் பண்புடையதாய்த் தோன்று கிறது. இன்பத்தையேயன்றி மறக்க முடியாத படிப்பினையையும் இது மக்களுக்கு அறிவுறுத்தும் வல்லமையுடையதாகையால், கவிஞர் அனைவரும் இச் சுவையைச் சிறந்ததாக மதிக்கின்றனர். இதனைச் சித்திரிக்கும் நூல்கள் திறனாய்வாளரால் சிறந்தனவாக மதிக்கப்படுகின்றன. -